சர்வதேச டி20 தொடரில் தோல்வி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி நடந்து முடிந்துள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் கோப்பையை இந்தியாவிடம் பறிகொடுத்தது.
முதல் போட்டியில் வெற்றி
இந்நிலையில் சர்வதேச டி20 தொடருக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணியினர் ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியின் தோல்விக்கு காரணம்
கடந்த போட்டியில் பௌலிங்கில் கவனமின்றி செய்யப்பட்ட முடிவுகளே அணியின் தோல்விக்கு காரணமாக இருந்ததாக கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். 6 பௌலிங் தேர்வுகள் போதுமானதாக இருக்கும் என்று தான் கருதியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வெற்றிபெற தீவிர நடவடிக்கைகள்
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் பௌலிங்கில் அதிக கவனம் செலுத்த கேப்டன் விராட் கோலி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பௌலிங்கில் சிறப்பு கவனம்
நாளைய போட்டி நடைபெறவுள்ள விசாகப்பட்டினத்தின் ராஜசேகரரெட்டி மைதானம் பேட்டிங் பிட்ச் கொண்டது. இதையடுத்து ஐந்தாவதாக பௌலிங் செய்ய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹால் அல்லது சர்துல் தாக்கூர் இறக்கப்படலாம் என தெரிகிறது.
ஸ்ரேயாஸ் -பந்த் பார்ட்னர்ஷிப்
கடந்த போட்டியில் ஆரம்பநிலை ஆட்டக்காரர்கள் சொதப்ப, 4வதாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்தின் 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் கவனம் பெற்றுள்ளது. இவர்கள் இந்த இடத்திலேயே இரண்டாவது போட்டியிலும் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டக்காரர்களின் இடம் மாறாது
இந்நிலையில் கீரன் பொல்லார்டின் தலைமையிலான எதிரணியில் முதல் போட்டியில் சதமடித்த சாய் ஹோப் மற்றும் சிம்ரன் ஹெட்மயர் ஆகிய இருவரும் அதே இடத்தில் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து முதல் போட்டியில் பார்ட்னர்ஷிப்பில் 218 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
10வது தொடரை வெல்ல முனைப்பு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா இதுவரை விளையாடிய 9 தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது விளையாடிவரும் 10வது ஒருநாள் தொடரையும் வெல்ல முனைப்பு காட்டி வருகிறது. இதை முறியடிக்கும் முயற்சியில் மேற்கிந்திய தீவகள் அணி தீவிரம் காட்டுகிறது.