ராஜ்கோட்: ஐ.பி.எல். லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை ஹைதராபாத் சன்ரைசர்ஸ்10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த ரெய்னா தலைமையிலான குஜராத் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது. ராஜ்கோட்டில் இன்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
குஜராத் அணியில் பின்ச் மற்றும் மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். கடந்த மூன்று போட்டியிலும் குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய பின்ச் இந்த போட்டியில் புவனேஷ்வர் பந்து வீச்சில் டக் அவுட் ஆனார்.
இதன் பிறகு சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார் மெக்கல்லம். ஸ்ரன் ஓவரில் மெக்கல்லம் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்ட, 5 ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்தது குஜராத். அந்த அணி 7.2 ஓவர்களில் 56 ரன்களை எட்டியபோது மெக்கல்லம் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 8 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த பிராவோ (8), ஜடேஜா (14), நாத் (5) ஆகியோர் ரன் குவிக்க தவறினர்.. ரெய்னா மட்டும் 51 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து 20-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் புவனேஷ் குமார் அதிகப்பட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு வார்னர், தவான் நல்ல துவக்கம் தந்தனர். இந்த தொடக்க ஜோடியை பிரிக்க ரெய்னா மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இதனால் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 14.5 ஓவரில் 137 எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 74 ரன்களும், தவான் 53 ரன்களும் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தனர். 4 விக்கெட்களை வீழ்த்திய ஹைதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.