பிரச்சனை
இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப்தான் தற்போது மிக மோசமான அணியாக உருவெடுத்து உள்ளது. வரிசையாக போட்டிகளில் தோல்வி அடைந்து பஞ்சாப் அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த இரண்டு சீசன்களில் பஞ்சாப் கேப்டனாக அஸ்வின் இருந்தார். அந்த அணி இரண்டு சீசனிலும் பெரிய அளவில் சாதிக்கவில்லை.
கேப்டன் மாற்றம்
இதனால் இந்த சீசனில் அஸ்வினை நீக்கிவிட்டு கே. எல் ராகுலை பஞ்சாப் அணி கேப்டனாக நியமித்தனர். ராகுலின் கோரிக்கையின் படி தனது மாநிலத்தை சேர்ந்த கும்ப்ளே அணியின் பயிற்சியாளராக வந்தார். அதேபோல் கர்நாடகாவை சேர்ந்த கருண் நாயர், மயங்க் அகர்வால், கவுதம் என்று கர்நாடகாவை சேர்ந்த வீரர்கள் அணியில் எடுக்கப்பட்டனர்.
ஆனால் என்ன
கே. எல் ராகுலின் கோரிக்கைக்கு ஏற்றபடி அணியில் எல்லா மாற்றங்களும் செய்யப்பட்டது. ஆனால் அணியில் இவ்வளவு மாற்றங்கள் செய்யப்பட்ட பின்பும் கூட பஞ்சாப் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. கே. எல் ராகுல் கேட்டதை எல்லாமே அணி நிர்வாகம் கொடுத்தது. அணியிலும் மிக சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் பஞ்சாப் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது.
தோல்வி
இந்த நிலையில் 6 போட்டிகளில் 2வது போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற பஞ்சாப் ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. கடந்த 4 போட்டிகளில் வரிசையாக பஞ்சாப் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப்பின் தொடர் தோல்விக்கு ராகுலின் மோசமான கேப்டன்சிதான் காரணமாக பார்க்கப்படுகிறது. இவர் ஒரு கேப்டனாக எடுக்கும் முடிவுகள் எதுவும் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லவில்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.
பேட்டி கொடுத்தார்
நேற்று ஹதராபாத்திற்கு எதிராக நடந்த போட்டியில் தோல்விக்கு பின் கே. எல் ராகுல் கொடுத்த பேட்டிங் இன்னும் சர்ச்சையை அதிகப்படுத்தி உள்ளது. அதில், எங்கள் அணியின் டெத் ஓவர்களில் கொஞ்சம் முன்னேறி இருக்கிறோம். கடைசியில் ரன் செல்வதை கட்டுப்படுத்தினோம். எங்கள் அணியில் எல்லா வீரர்களும் திறமையான வீரர்கள்தான்.
தெரியும்
அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். நாங்கள் நிறைய கஷ்டப்பட்டு உழைக்கிறோம். எல்லோரும் அணிக்காக பாடுபடுகிறார்கள். இதற்கு முன் இந்த வீரர்கள் எல்லாம் தங்கள் நிரூபித்து உள்ளனர். சில சமயம் களத்தில் நாம் நினைத்தது நடக்காது. நாம்தான் பொறுமையாக இருக்க வேண்டும், என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சை
இந்த நிலையில் ராகுலின் பேட்டி அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது. ராகுல் ஒரு கேப்டனாக வீரர்களை வழிநடத்தவில்லை. வீரர்கள் அவர்கள் இஷ்டப்படி செயல்படுகிறார்கள். இப்போது ராகுலின் பேட்டியும் அதை உணர்த்துகிறது. தோல்விக்கான காரணம் கூட அவருக்கு தெரியவில்லை. 5 போட்டிகள் தோல்வி அடைந்துவிட்டு.. எல்லோரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.. இது என்ன நியாயம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.
விமர்சனம்
பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவும் கே. எல் ராகுல் மீது கோபத்தில் இருக்கிறாராம். கே. எல் ராகுலை நீக்கிவிட்டு வேறு யாரையாவது கேப்டனாக நியமிக்கலாமா என்று அவர் யோசனை செய்து வருகிறார். ஆனால் அதற்கு முன் கே. எல் ராகுல் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் அணியில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் அளவிற்கு வேறு மூத்த வீரர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.