நீடிக்கும் சிக்கல்
ஐபிஎல் தொடர் அக்டோபர் 15ம் தேதியுடன் முடிவடைந்த 2 நாட்களில் டி20 உலகக்கோப்பை தொடர் வரவுள்ளது. இதன் காரணமாக பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் விலகினர். அந்தவகையில் ஆர்சிபி அணியில் நியூசிலாந்து வீரர்கள் ஃபின் ஆலன், ஸ்காட் குக்கெலிஜின் ஆகியோர் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேன் ரிச்சர்ட்ஸன், டேனியல் சாம்ஸ் மற்றும் ஆடம் சாம்பா என 5 அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை எனத் தெரிவித்து விட்டனர். இதனால் அந்த அணி மாற்று வீரர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
அதிரடி மாற்றங்கள்
இறுதியாக பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் அணி வீரர்கள் தேர்வை முடித்துள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் ஆடம் சாம்பாவுக்கு பதிலாக இலங்கை அணி வீரர் வானிண்டு ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார். ஹசரங்கா சமீபத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியவர் ஆவார். அவரின் எகானமி 5.58 என்று சிறப்பாக உள்ளது.
Recommended Video
2 இலங்கை வீரர்கள்
இதே போல நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலனுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிம் டேவிட் ஆர்சிபியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் டேனியல் சாம்ஸுக்கு மாற்றாக இலங்கையின் துஷ்மந்தா சமீரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேன் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக ஜார்ஜ் கார்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேப்டன் கோலி கருத்து
இந்நிலையில் ஆர்சிபி அணியின் மாற்றங்கள் குறித்து கேப்டன் கோலி பேசியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து திரும்பிய கோலி, தற்போது அமீரகத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். அவரின் கருத்தை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், அணி வீரர்களுடனும், நிர்வாகத்துடனும் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறேம். எங்கள் அணியில் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் நல்ல திறமையானவர்கள்.
அதீத நம்பிக்கை
ஆர்சிபி அணியின் மிக முக்கியமான வீரர்கள் வெளியேறியுள்ளனர். எனினும் புதிதாக வந்தவர்கள் அமீரக களத்திற்கு ஏற்ற வகையில் மிகச்சிறப்பாக உள்ளனர். பயிற்சி ஆட்டத்தின் போதும், நேரடி போட்டிகளின் போதும், அவர்களின் செயல்பாடுகளை காண ஆவலுடன் உள்ளேன். முதல் பகுதி ஆட்டத்தை போலவே 2வது பகுதியிலும் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன் எனத்தெரிவித்துள்ளார்.
வலுவான அணி
இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் உள்ளன. தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றம் ஆர்சிபிக்கு எப்படி பட்ட பலனை கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.