
இமாலய இலக்கு
இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டூப்பளசிஸ் (25), சிரேஷ் ரெய்னா (3), மொயின் அலி (21) ஆகிய சீனியர் வீரர்கள் அடுத்தடுத்து சொதப்பினர். ஆனால் மறுபுறம் நின்று விளையாடிய இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவருக்கு துணையாக ஜடேஜா பார்ட்னர்ஷிப் கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 60 பந்துகளில் 101 ரன்களை சேர்த்தார். ஜடேஜா 15 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார்.

ரன் வேட்டை நடத்திய ராஜஸ்தான்
இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி ஆட்டத்தின் முதல் பந்து முதலே சிஎஸ்கே பவுலர்களை மிரட்டியது. தொடக்க வீரர் எவின் லிவிஸ் 27 ரன்களுக்கு வெளியேற, மறுமுனையில் நின்றிருந்த யாஷஸ்வி ஜெய்ஷ்வால் சிக்ஸர் மழை பொழிந்தார் 21 பந்துகளை சந்தித்த அவர், 50 ரன்களை விளாசினார். அடுத்து கேப்டன் சாம்சன் தனது பங்கிற்கு 28 (24) ரன்களும், ஷிவம் துபே 64 (42) எடுக்க, இறுதியில் கிளென் பிளிப்ஸ் 14 (8) முடித்து கொடுத்தார். இதனால், ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 190/3 ரன்கள் அடித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தோனி விளக்கம்
இப்போட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, முக்கியமாக டாஸை நாங்கள் இழந்திருக்கக் கூடாது. 190 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். பனியின் தாக்கம் போக போக அதிகமாக இருந்ததால், மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியது. பந்து சரியான வேகத்தில் பேட்டிற்கு வரத் தொடங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் இதனை பயன்படுத்திக்கொண்டனர். முதல் 6 ஓவர்களிலேயே போட்டியை அவர்களின் பக்கம் கொண்டு சென்றுவிட்டனர்.

நல்ல ஸ்கோர் கிடையாது
அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கு 250 ரன்கள் என்ற இலக்கு கூட நெருக்கமாக இருந்திருக்கும். இந்த மைதானத்தில் நல்ல ஸ்கோர் எதுவென்று, பந்துகளை எதிர்கொள்ளும்போதே தெரிந்துகொண்டு, பேட்ஸ்மேன்கள் அதற்கேற்றவாறு அதிரடியாக விளையாட வேண்டும். 160-180 என்பதே இங்கு நல்ல ஸ்கோர் கிடையாது. அவர்கள் பிட்சை சரியாகக் கணித்தனர். துவக்கத்திலேயே சிறப்பாக விளையாடியதால், அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அழுத்தங்கள் இல்லாமல் விளையாடினார்கள்.

அந்த வீரர் இல்லை
இப்போட்டியில் நாங்கள் அழுத்தத்தை சந்தித்ததற்கு தீபக் சஹார் இல்லாததும் காரணம் எனக்கூறலாம். பவர்ப்ளே ஓவர்களில் தீபக் சஹார் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். அவர் இந்த போட்டியில் இல்லாதது எங்களுக்கு பெரும் இழப்பாக இருந்தது. இப்போட்டியில் பவுலர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்போட்டியை மறந்துவிட வேண்டும். ஆனால் இதிலிருந்து பாடமும் கற்றிருக்க வேண்டும். ஏனென்றால், பிளே ஆஃபில் இதேபோல் நடந்தால், அங்கு பாடம் கற்றுக்கொண்டிருக்க முடியாது எனக் கூறினார். சிஎஸ்கே ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications