டெல்லி கேப்பிடல்ஸ்
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையில் அசுர பலத்தில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 2 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த 2 போட்டிகளுமே 180க்கும் அதிகமான இலக்கை துரத்தி பெற்ற வெற்றி என்பதால் பேட்டிங்கில் பலமாக உள்ளது. ஆனால் இவை மும்பையில் நடைபெற்ற போட்டிகளாகும். அங்கு பேட்டிங்கிற்கு சாதகமான சூழல் நிலவியது. இந்நிலையில் இன்றைய போட்டி மிகவும் கடினமான பிட்சாக பார்க்கப்படும் சென்னை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
இதே போல கடந்த சீசனில் 4 முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்ற நம்பிக்கையுடன் மும்பை அணி உள்ளது. அதே போல சென்னை மைதானத்தில் ஏற்கனவே 3 போட்டிகளில் ஆடி அதில் 2ல் வெற்றி பெற்று மும்பை பலமாக உள்ளது. இதனால் இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அனுபவம்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மும்பை அணியின் பவுலிங் பயிற்சியாளர், ஷேன் பாண்ட், டெல்லி அணி மிகவும் திறமைவாய்ந்த ஒன்று. அவர்கள் இந்த சீசனில் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளனர். எனவே நாங்கள் அவர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சென்னை பிட்ச்-ல் எங்களுக்கு அனுபவம் உள்ளது. எப்போது அந்த அணி வீரர்களுக்கு எதிராக பந்துவீச்சில் பல விதங்களில் தாக்குதல் நடத்துவோம். இந்த முறையும் அதனையே செய்வோம்.
பந்துவீச்சு பலம்
கடைசி 2 போட்டிகளில் எங்களுக்கு எதிராக மற்ற அணிகள் சிறந்த தொடக்கத்தை பெறுகின்றனர். ஆனால் ஆட்டத்தின் பாதியில் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தின் போக்கையே மாற்றுகின்றனர். பின்னர் கடைசி ஓவர்களில் பும்ரா மற்றும் போல்ட் முடித்து வைக்கின்றனர். குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் எதிரணியினர் 20 -25 ரன்கள் மட்டுமே எடுக்கின்றனர். எனவே மும்பை அணி பந்துவீச்சாளர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு புரிந்துவைத்துள்ளனர். இதே ப்ளானோடு தான் டெல்லி அணியை எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.