பேர் சொல்லும் பிள்ளை…. கிரிக்கெட்டில் முத்திரை பதிக்க தயாராகும் சச்சின், டிராவிட் மகன்கள்
டெல்லி: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர், நெடுஞ்சுவர் ராகுல் டிராவிட் சாதனைகள் மிகவும் ஆழமாக பதிக்கப்பட்டுள்ளன.
உலகின் மிகச் சிறந்த வீரர்கள் என்று தங்களுடைய பெயரைப் பதிவு செய்தவர்கள். தற்போது அவர்களுடைய வாரிசுகள் தந்தையின் பெயரைச் சொல்லும் பிள்ளைகளாக உருவாகி வருகின்றனர்.

மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுத் தர வேண்டிய அவசியமில்லை. அதேபோல், சச்சினின் மகன் அர்ஜூனும், டிராவிடின் மகன் சமித்தும் அசத்தி வருகின்றனர்.
மும்பை ஜூனியர் அணிக்காக விளையாடும்போதே, தான் இன்னார் என்பதை நிரூபித்தார் அர்ஜூன். தற்போது, ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் உலக கிளப் அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டியில் நான்கு ஓவர்களில், 7 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார் ஜூனியர் சச்சின். அது போதாது என்று, 27 பந்துகளில், 48 ரன்களை விளாசி, நான் சச்சினின் மகன்டா என்பதை நிரூபித்தார்.
மகன் தந்தைக்காற்றும் கடமை என்பதற்கு ஏற்ப, குட்டி ராகுல் டிராவிடான சமித்தும் அப்பாவின் பெயரைக் காப்பாற்றியுள்ளார். கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், 150 ரன்கள் அடித்து நொறுக்கினார் சமித்.
மல்லையா அதிதி சர்வதேச பள்ளி இந்தப் போட்டியில், 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 500 ரன்கள் எடுத்தது. அதில் சமித், 150 ரன்கள் எடுத்தார். எஸ். ஆர்யன், 154 ரன்கள் எடுத்தார். எதிர்த்து விளையாடிய விவேகானந்தா பள்ளி 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு விரைவில் மற்றொரு சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் தயாராகி வருகின்றனர்.
Story first published: Monday, August 27, 2018, 17:04 [IST]
Other articles published on Aug 27, 2018


Click it and Unblock the Notifications