17வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 17வது போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
சிறப்பான வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், நேற்றைய போட்டி அந்த அணிக்கு சிறப்பான வெற்றியாக அமைந்துள்ளது. போட்டியின் துவக்கம் முதலே அந்த அணியில் வெற்றிக்கான தீவிரம் அனைத்து வீரர்களிடமும் காணப்பட்டது. குறிப்பாக கேப்டன் கேஎல் ராகுல் அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
2 விக்கெட்டுகள்
நேற்றைய போட்டியில் பௌலர் முருகன் அஸ்வினுக்கு பதிலாக ஸ்பின்னர் ரவி பிஸ்னோய் களமிறங்கினார். சென்னை போன்ற கடினமான பிட்ச்சில் அவர் 4 ஓவர்களை போட்டு 21 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நேற்றைய போட்டியின் வெற்றிக்கு அவரும் முக்கிய காரணமாக அமைந்தார்.
பிஸ்னோய் விளையாடாததற்கு காரணம்
கடந்த சீசனில் அறிமுகமாகி சிறப்பான போட்டிகளை அளித்திருந்த அவர் இந்த சீசனின் கடந்த 4 போட்டிகளில் அணிக்காக விளையாடாதது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவர் கடந்த போட்டிகளில் விளையாடாததற்கான காரணம் குறித்து கேப்டன் கேஎல் ராகுல் வெளிப்படுத்தியுள்ளார்.
நீக்கிக் கொள்ள அவகாசம்
பிஸ்னோய் தன்னுடைய பௌலிங்கில் சில குறைகளை நீக்கிக் கொள்ளவே அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டதாகவும், அவர் அனில் கும்ப்ளேவுடன் இணைந்து தன்னுடைய பௌலிங்கை சிறப்பாக்கிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் கடந்த 4 போட்டிகளில் விளையாடவில்லை என்றும் ராகுல் தெரிவிதுள்ளார். மேலும் பிஸ்னோய் மிகவும் துணிச்சலானவர் என்றும் ராகுல் பாராட்டியுள்ளார்.