கொல்கத்தா: ஐபிஎல் லீக் போட்டிகளில் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில், தினமும் யார் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்று த்ரில்லர் படத்தை விட அதிக ட்விஸ்ட்டுகளுடன் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் வரை மழை பெய்து ஆட்டம் ரத்தாகி விடுமோ என்று ரசிகர்கள் பயந்த நிலையில், ஈடன் மைதானத்தில் ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை வீழ்த்தும் நோக்கத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் பௌலிங்கை தேர்ந்தெடுத்தார். கொல்கத்தா அணியில் ஒரு மாற்றமும் ராஜஸ்தான் அணியில் மூன்று மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது.
ஆட்டம் தொடங்குவதற்கு நான்கு மணி நேரங்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்காக ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை நிர்வாகம் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், இருவரும் உடனே லண்டன் புறப்பட வேண்டுமென்கிற ராஜஸ்தான் நிர்வாகத்திற்கு பேரிடியாக அமைந்தது. கடந்த நான்கு போட்டிகளில் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற ஜோஸ் பட்லர், போவதற்கு முன் தரமான ஒரு சம்பவம் செய்ய வேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டதுப் போல ஆட்டத்தை துவக்கினார்.
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ஷிவம் மாவியின் பந்துவீச்சில் 28 ரன்கள் அடித்து அட்டகாசமான ஒரு அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். ஆனால் தினேஷ் கார்த்திக் சுதாரித்துக்கொண்டு உடனே சுனில் நரேனைக் கொண்டு ரன்களைக் கட்டுப்படுத்த, அதற்கடுத்த ஓவரில் ராகுல் திரிபாதி வெளியேறினார். அதன் பின்பு, சுழலின் துணைக்கொண்டு ராஜஸ்தானின் ரன் ரேட்டை கொல்கத்தா கட்டுக்குள் வைத்தது.
குல்தீப் யாதவ் முதன்முறையாக பியுஷ் சாவ்லாவைப் போல, மித வேகப்பந்து வீச்சாளரைப்போல பந்தை சுழலச் செய்யாமல், நேராக வீசி பட்லரின் விக்கட்டை வீழ்த்தி கொல்கத்தாவின் வெற்றியை உறுதி செய்தார். பென் ஸ்டோக்ஸ் தொடர் முழுவதும் பேட்டிங்கில் சொதப்பியதும் ராஜஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று.
வழக்கம் போல சுனில் நரேன் பட்டாசாக முதல் ஓவரிலேயே 21 ரன்களை குவித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். அதன் பின்பு உத்தப்பா, ரானா ஆகியோர் தங்களது விக்கட்டை இழந்தாலும், தினேஷ் கார்த்திக்-க்றிஸ் லின் ஜோடி பொறுப்பை உணர்ந்து முக்கியமான இரண்டு புள்ளிகளைப் பெற்றது.
நான்கு விக்கட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.