முதலில் ஸ்கிரிப்ட்
முதலில் சூதாட்டத்திற்கான ஸ்கிரிப்ட் வீரர்களிடம் வழங்கப்படும். எந்த ஓவரில் எத்தனை ரன் கொடுக்க வேண்டும், எந்த ஓவரில் எத்தனை ரன் அடிக்க வேண்டும் என்று அந்த ஸ்கிரிப்டில் இருக்கும். இது எழுத்து வடிமாக பிரிண்ட் செய்து கொடுக்கப்படும். இதுதான் சூதாட்டத்தில் முதல்படி என்று சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா தெரிவித்துள்ளனர். சூதாட்டம் செய்ய ஒப்புக் கொள்ளும் வீரர்களை தனியாக சந்தித்து இந்த ஸ்கிரிப்ட் அளிக்கப்படும்.
சிக்னல்
எப்போதும் தனியாகவே வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் சமயங்களில் குழுவாகவும் வீரர்கள் சூதாட்டம் செய்வார்கள். அதுபோன்ற சமயங்களில் பீல்டிங் மாற்றவதே சிக்னலாகும். கேப்டன் சூதாட்டத்தில் ஈடுபடும் போது ஒரு குறிப்பிட்ட ஓவரில் இரண்டு முறை பீல்டிங் மாற்றினால் அது சிக்னல் ஆகும். ஆனால் எல்லா ஓவரிலும் இல்லாமல் சில குறிப்பிட்ட ஓவர்களில் மட்டுமே இது கணக்கில் எடுக்கப்படும்.
ரெட் வாட்ச்
இதுதான் இப்போது வரை சூதாட்டத்தில் மிகச்சிறந்த சிக்னலாக இருக்கிறது. பவுலர், பேட்ஸ்மேன், பீல்டர் என அனைவருக்கும் இந்த சிக்னல் முறை எளிதாக பொருந்தும். சூதாட்ட நபர்கள் ஒரு சிவப்பு நிற வாட்சை வீரர்களுக்கு வழங்குவார்கள். எப்போது அந்த வாட்சை வீரர்கள் அணிகிறார்களோ அப்போது சூதாட்டம் செய்யப்படும் என்று அர்த்தம். மேலும் சமயங்களில் சிவப்பு கண்ணாடியும் சிக்னலாக பயன்படுத்தப்படும்.
பவுலர் கொடுக்கும் சிக்னல்
பவுலர்கள் கொடுக்கும் சிக்னல்கள் பாதுகாப்பு கருதி அடிக்கடி மாற்றப்படும். ஆனால் கைக்குட்டை வைத்து முகம் துடைப்பது முக்கியமான சிக்னல் ஆகும். சிலருக்கு சிக்னல் கொடுக்க பயம் என்றால் முதல் பந்தில் 'வைட்' போடுவார்கள். இல்லையென்றால் முதல் பந்தை போட்டுவிட்டு நேரடியாக சென்று கீப்பரிடம் பேசுவார்கள். ஆனால் இதெல்லாம் 6, 10, 15, 20 ஆகிய ஓவர்களில் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மற்ற ஓவர்களில் முதல் பந்து 'வைட்' போட்டால் அது கணக்கில் வராது.
பேட்டிங் சிக்னல்
பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் சிக்னல்களும் இதேபோல்தான் இருக்கும். பந்து போட வருபவரை 6,10, 15, 20 ஓவர்களில் பேட்ஸ்மேன் பாதியில் நிறுத்தினால் அது சிக்னல். அதேபோல் அந்த ஓவரில் கிளவுஸை மாற்றுவது, ஹெல்மெட்டை கிழட்டுவது போன்ற செயலை செய்தாலும் அது சிக்னலாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஐபிஎல் போட்டியில் கேரளா வீரர் ஸ்ரீசாந்த் இதுபோன்ற சிக்னல் கொடுத்துதான் போலீசில் மாட்டினார்.
அடுத்து என்ன
ஒரு வீரர் களத்தில் இதுபோன்ற சிக்னல் கொடுத்துவிட்டார் என்றால் அடுத்து எல்லாம் வேகமாக நடக்கும். மைதானத்தில் உயர்தர ரசிகர்கள் இருக்கும் இடத்தில் இருந்து சூதாட்ட நபர் இதை கவனித்துக் கொண்டே இருப்பார். சிக்னல் கிடைத்ததும் அவர் உடனடியாக போன் செய்து தனது சூதாட்ட குழுவிடம் தகவலை தெரிவிப்பார். அதன்பின் இந்த சூதாட்டம் நடக்கும். ஆனால் இது எல்லாம் 2-3 நிமிடத்திற்குள் நடக்க வேண்டும். இந்த சிக்னல்கள் எதுவும் டிவியில் காட்டப்பட்டது என்று அதிர்ச்சி அளிக்கும் தகவலை இருவரும் கூறியுள்ளனர்.