ருதுராஜ் கெயிக்வாட் நீக்கம்
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் நியூசிலாந்து மற்றும் வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் டி20, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெயிக்வாட் தேர்வு செய்யப்படவில்லை. ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியதால், வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று பார்க்கப்பட்டது.
ருதுராஜ் கெயிக்வாட் கேள்வி
இதனால் விஜய் ஹசாரே தொடரில் ருதுராஜ் கெயிக்வாட் பங்கேற்றார். இந்த தொடரில் விளையாடி மீண்டும் தனது ஃபார்மை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கிய ருதுராஜ் கெயிக்வாட், தேர்வுக் குழு தன்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்று அனைவருக்கும் கேள்வி எழுப்பும் வகையில் விளையாடி வருகிறார்.
3 சதங்கள்
இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட 3 சதங்கள் விளாசியதோடு 552 ரன்கள் அடித்து அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 6 பந்துகளுக்கு 7 சிக்சர்களை விளாசி சாதனை படைத்ததன் மூலம் ருதுராஜ் கெயிக்வாட் இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட வேண்டும் என்று குரல்களும் எழுந்துள்ளன.
கேப்டன் ருதுராஜ்
அசாம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 126 பந்துகளில் 168 ரன்கள் விளாசியதோடு, அணியையும் சிறப்பாக வழிநடத்தி சிறந்த கேப்டனாகவும் உருவாகி வருகிறார். விஜய் ஹசாரே தொடரை மகாராஷ்டிரா அணி வென்றால், ருதுராஜ் கெயிக்வாட் அடுத்த கேப்டன்சி மெட்டீடியலாக பார்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ரசிகர்கள்
அதுமட்டுமல்லாமல் சுழற்பந்துவீச்சை மிக எளிதாக கையாளும் ருதுராஜ், விரைவில் டெஸ்ட் அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று பார்க்கப்படுகிறது. ருதுராஜ் கெயிக்வாட் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருவது சென்னை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.