பெஸ்ட் பிளேயிங் லெவன்
மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகள். அனைத்துக்கும் கேப்டன் விராட் கோலி. இங்கிலாந்து கண்டிஷன். ஸ்விங் அண்ட் சீம் பவுலிங். அடிக்கடி மாறும் தட்பவெப்ப நிலை. தகவமைக்கும் பண்பு, சரியான அணிக் கலவை, பெஸ்ட் பிளேயிங் லெவன் தேர்வு, வீரர்களின் காயம், இக்கட்டான நேரத்தில் சரியான முடிவு என்று இந்திய கிரிக்கெட் அணிக்கு சோதனைகள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றன. இந்த அத்தனை தடைக் கற்களையும் கேப்டன் விராட் கோலி தாண்டி வந்தாக வேண்டும்.
கம்பீர வெற்றி
ஏற்கனவே, ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி பெற்ற மெகா மோசமான தோல்வியை எவரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பிறகு ரஹானே தலைமையிலான அணி, 2-1 என்று கோப்பையைக் கைப்பற்றி கம்பீரமாக நாடு திரும்பியது.
கேப்டன்ஷிப் கேள்வி
பிறகு, இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன்பிறகு அடுத்தடுத்த போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றினாலும், முதல் போட்டியில் இந்தியா தோற்றது. அதேசமயம், மோசமான பிட்ச் காரணமாக தான் அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா வென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தொடரில், கோலி அந்தளவுக்கு சிறப்பாகவும் விளையாடவில்லை.
ரோஹித் தலைமையில்
இந்த சூழலில் தான், அவரது கேப்டன்சியில் ஒரு மெல்லிய சந்தேகத்துடன் இந்திய அணி இங்கிலாந்து அனுப்பப்படுகிறது. ஒருவேளை, இங்கிலாந்து டூரில், இந்தியா செமத்தியாக அடி வாங்கி நாடு திரும்பினால், கோலியின் மூன்று வடிவ அணியின் கேப்டன்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்படலாம். அவரது பிரஷரை குறைக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்படலாம். ரோஹித் தலைமையில், டி20 போட்டிகளில் கோலி விளையாட நேரிடலாம்.
கனவு நிறைவேறலாம்
முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிரண் மோரேவும் இதைத் தான் தெரிவித்திருக்கிறார். ஐந்து ஐபிஎல் கோப்பைகள், ஆசிய கோப்பை சாம்பியன் என்று பல பட்டங்களை தன் வசம் வைத்திருக்கிறார் கேப்டன் ரோஹித். ஸோ, இங்கிலாந்து தொடரின் முடிவின் அடிப்படையில், பல அதிரடி மாற்றங்களையும், நடவடிக்கைகளையும் ரசிகர்கள் சந்திக்க நேரிடலாம். ரோஹித்தின் கேப்டன் கனவும் நிறைவேறலாம்.