சௌதாம்ப்டன் : இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டுக்கு தயாராகி வருகிறது. முதல் மூன்று டெஸ்டில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ள இந்திய அணி அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஆடிய அஸ்வின், இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நான்காவது டெஸ்டில் ஆடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. ஒருவேளை, அஸ்வின் ஆட முடியாத நிலை ஏற்பட்டால் யாரை அணியில் களமிறக்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டிங்ஹமில் நடந்த மூன்றாவது போட்டியில் அஸ்வினுக்கு இடுப்பில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. நான்காவது போட்டிக்கு ஏழு நாள் இருந்த காரணத்தால் அவர் குணமாகிவிடுவார் என அப்போது நம்பிக்கை தெரிவித்தார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
நான்காவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30 தொடங்க உள்ள நிலையில், அஸ்வின் திங்கள்கிழமை நடந்த பயிற்சிகளில் பந்து வீசவில்லை. சிறிது நேரம் பேட்டிங் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டார். இதனால், அவரது காயம் இன்னும் குணமாகவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது.
ஒருவேளை அஸ்வின் குணமாகவில்லை என்றால் அடுத்து ஜடேஜாவுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அவர் நீண்ட பயிற்சியில் பந்து வீசியதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் அஸ்வின் உடல்நிலை தேறும் பட்சத்தில் அவரே அணியில் இடம் பிடிப்பார்.
அதே போல, புதிதாக அணியில் சேர்க்கப்பட்ட ஹனுமா விஹாரி மற்றும் ப்ரித்வி ஷாவுக்கு, பயிற்சியில் கடைசியாக சிறிது நேரமே வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவர்களுக்கு நான்காவது டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைப்பது அரிது என்றே தெரிகிறது.
38 டெஸ்டில் 38 மாற்றங்கள் செய்துள்ள கோலி, தான் விரும்பாவிட்டாலும் 39வது முறையும் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுமோ?