ரோகித்தின் கேப்டன்சி
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட ரோகித் சர்மா இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதிலும் 2 போட்டிகளில் மட்டுமே இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். அதுவும் கடந்தாண்டு பிப்ரவரியில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்திருந்தார்.
என்ன நடந்தது?
இங்கிலாந்துடனான ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியிலும், வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் அவரால் விளையாட முடியவில்லை. காயத்தின் காரணமாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். 35 வயதாகும் ரோகித் சர்மாவுக்கு தற்போது தான் இந்தியாவை 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வழிநடத்தும் வாய்ப்பே கிடைத்துள்ளது.
முற்றிலும் வேறு ப்ளான்
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பான கேப்டன்சியை காட்டி வரும் ரோகித் சர்மா, இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தனது திறமைகள் என்னவென்பதை காட்டாமல் உள்ளார். இதில் 90 ஓவர்களுக்கு பவுலர்களை ரொட்டேட் செய்ய வேண்டும் என்பதால் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். விராட் கோலி இருந்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா அசுர பலத்தில் இருந்தது. அதன் விளைவாக தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. எனவே கோலியை போன்றே தானும் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்பதை ரோகித் காட்டியாக வேண்டும்.
கடைசி வாய்ப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த தொடரில் இந்திய அணி 3 - 1 என்ற கணக்கிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. சொந்த மண்ணிலேயே நடைபெறுவதால் ரோகித்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.