3வது போட்டி
இந்திய அணி தோல்வியடைந்தாலும் ரோகித் மனதை வென்றுவிட்டார் என்பது தான் ரசிகர்களிடையே எழுந்து வரும் கருத்துக்களாக இருந்து வருகிறது. விரல்களில் காயம் ஏற்பட்ட ரோகித் சர்மா பேட்டிங்கிற்கு வரமாட்டார் என தெரிந்தது. இந்திய அணிக்கு 65 ரன்கள் தேவை, ஆனால் 8 விக்கெட்கள் சரிந்துவிட்டது என்ற இக்கட்டான சூழலின் போது 9வது வீரராக ரோகித் களத்திற்குள் வந்தார்.
ரோகித்தின் போராட்டம்
காயத்தையும் மீறி விளையாடிய அவர், 28 பந்துகளில் 51 ரன்களை விளாசி வங்கதேச வீரர்களை கலங்கடித்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்த போது, ரோகித்தால் ஒரு சிக்ஸரை மட்டுமே அடிக்க முடிந்ததால் இந்திய அணி வெற்றிக்கு அருகே சென்று தோல்வியடைந்தது.
ரோகித்தின் சாதனை
இந்நிலையில் இதன் மூலம் பிரமாண்ட சாதனையை ரோகித் படைத்துள்ளார். அவர் இப்போட்டியில் 5 சிக்ஸர்களை அடித்ததால் சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதே போல உலகளவில் இந்த ரெக்கார்டை செய்யும் 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் அசத்தியிருந்தார்.
ரோகித்தின் கெத்து
ஆனால் இச்சாதனையை படைக்க கிறிஸ் கெயிலை விட குறைந்த போட்டிகளையே ரோகித் எடுத்துக்கொண்டார். கிறிஸ் கெயில் 483 போட்டிகளில் 553 சிக்ஸர்களை அடித்துள்ளார். 500வது சிக்ஸரை எட்ட அவர் 447 போட்டிகளில் விளையாடினார். ரோகித் சர்மா 500 சிக்ஸர்களை அடிக்க, 428 போட்டிகளையே எடுத்துக்கொண்டார்.
புள்ளிவிவரம்
இந்த 500 சிக்ஸர்களில் 225 சிக்ஸர்கள் 50 ஓவர் கிரிக்கெட்டில் வந்ததாகும். டி20 கிரிக்கெட் என எடுத்துக்கொண்டால் ரோகித் சர்மா தான் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார்.