கோலி, ரோஹித் ஷர்மா மீதே அதிக வெளிச்சம்.. தவானுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.. ரவி சாஸ்திரி சோகம்!
ஆக்லாந்து: விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு கிடைத்த வெளிச்சம், ஷிகர் தவானுக்கு கிடைக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக இந்திய டி20 அணியில் இருந்து ஷிகர் தவான் விலக்கப்பட்டு, ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இரண்டாம் கட்ட இந்திய அணிக்கு கேப்டனாகவும் பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் சச்சின் டெண்டுல்கர் சாதனை காரணமாக டிராவிட், லக்ஷ்மண் உள்ளிட்ட வீரர்களுக்கு போதிய வெளிச்சம் கொடுக்கப்படவில்லை என்று பேசி வந்தனர்.
அதேபோல் கேப்டனான பின் சில வீரர்களுக்கு பேட்டிங் ஃபார்ம் பாதிக்கும். ஆனால் ஷிகர் தவான் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் ஷிகர் தவானுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பேச்சு இருந்து வருகிறது.

2023 உலகக்கோப்பை
2023ம் ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி நிர்வாகம் ஒருநாள் தொடர் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இதற்காக ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுக்கு பரிசோதனை முயற்சியில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரேயாஸ், சஞ்சு சாம்சன், சஹர் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

தவான் அரைசதம்
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரராக சுப்மன் கில் - தவான் களமிறங்கிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தனர். இதில் சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையி, ஷிகர் தவான் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அங்கீகாரம் இல்லை
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஷிகர் தவானுக்கு போதுமான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், ஷிகர் தவான் அதிக அனுபவம் கொண்ட வீரர். ஆனால் அதற்கான பாராட்டுக்களோ, அங்கீகாரமோ அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா மீது அதிக வெளிச்ச்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

அனுபவம் முக்கியம்
ஆனால் ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவானின் சாதனையை கொஞ்சம் பார்க்க வேண்டும். பெரிய அணிகளுக்கு எதிராக ஷிகர் தவான் சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடி உள்ளார். டாப் ஆர்டரில் இடதுகை வீரர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். ஷிகர் தவான் இயற்கையாகவே அதிரடியாக விளையாட கூடியவர். அவரால் புல் ஷாட், டிரைவ், கட் என அனைத்து ஷாட்களும் ஆட முடியும். இளைஞர்கள் அதிகளவில் இருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் அனுபவம் மிகப்பெரிய வரம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications