2 தினங்களில் துவக்கம்
ஐபிஎல் 2021 தொடருக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் பரபரப்பாக காணப்படுகின்றன. இடையில் கொரோனா பரவலும் அணிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வைத்துள்ளது. இந்நிலையில் எஸ்ஆர்எச் அணியும் சென்னையில் முகாமிட்டு பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டு வருகிறது.
100% பங்களிப்பு
இதனிடையே தன்னுடைய குவாரன்டைனை முடித்துக் கொண்டு அணியில் இணைந்துள்ள பௌலர் நடராஜன் தான் அணிக்கென 100 சதவிகித பங்களிப்பை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய லெங்க்த்தை தவற விடாமல் இந்த சீசனில் விளையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடராஜன் மகிழ்ச்சி
இந்த சீசனில் அதிகமாக ரன்களை கொடுக்காமல் பந்துவீச முயற்சிக்க உள்ளதாகவும் கடந்த தொடர்களில் நெருக்கடியுடன் விளையாடியது இந்த சீசனில் சிறப்பாக கைகொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்த சீசனில் அணியில் புவனேஸ்வர் குமார் இணைந்துள்ளது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
புவியிடம் ஆலோசனை
புவனேஸ்வர் குமார் நல்ல பார்மில் உள்ளதாகவும் நெருக்கடி நேரங்களில் அவரிடம் ஆலோசனை பெற்று தன்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய அணி தனக்கு குடும்பத்தை போன்றது என்றும் எப்போதும் தனக்கு ஆதரவாக அணி செயல்படுவதாகவும் நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.
முதல்முறையாக சென்னையில் ஆட்டம்
குறிப்பாக அதிக ரன்களை கொடுத்தாலும் அவர்கள் தன்னை தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை சென்னையில் தான் இதுவரை ஆடியதில்லை என்றும் இது முதல் முறை என்றும் குறிப்பிட்ட நடராஜன், தான் சேப்பாக்கத்தில் அதிகமான போட்டிகளை விளையாடியுள்ளதால் அங்கு விளையாடுவது சிறப்பானது என்றும் கூறியுள்ளார்.