2வது லீக் போட்டி
இந்திய அணி தனது அடுத்தப்போட்டியாக நாளை நெதர்லாந்து அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நாளை மதியம் 12.30 மணிக்கு தொடங்கும். இதற்காக வீரர்கள் அனைவரும் முன்கூட்டியே மெல்பேர்னில் இருந்து சிட்னிக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் பயிற்சியே செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் சிட்னியில் ஏற்பாடு சரியில்லை என்பது தான் .
தரம் குறைந்த உணவு
சிட்னியில் இந்திய அணி வீரர்களுக்கு தரப்பட்ட உணவு மோசமாக இருந்ததாக குற்றச்சாட்டு கிளம்பியது. ஹோட்டலில் அவர்கள் கொடுத்த உணவின் தரம் குறைவாகவும், வீரர்களின் டயட்டிற்கு ஏற்ற உணவுகளை கொடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் உணவை தொடர்ந்து மைதான பிரச்சினையும் கிளம்பியுள்ளது.
என்ன காரணம்
பயிற்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மைதானத்தில் இருந்து இந்திய அணி தங்கியுள்ள ஹோட்டலின் தூரம் 42 கிமீ ஆகும். தீவிர பயிற்சி செய்து சோர்வில் உள்ள வீரர்கள் காலை, மாலை என இரு வேளையும் சுமார் 1 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் இன்று பயிற்சிகள் முழுவதுமாக ரத்து செய்துவிட்டு வீரர்கள் நன்கு ஓய்வெடுத்து வருகின்றனர்.
ஆபத்து முடிவு
நேற்று நடைபெற்ற பயிற்சியில் இந்தியாவின் பேட்டிஸ்மேன்கள் மட்டுமே பயிற்சி மேற்கொண்ட நிலையில், பவுலர்கள் அனைவருமே ஓய்வில் தான் இருந்தனர். பயிற்சியே இல்லாமல் நெதர்லாந்தை எதிர்கொள்வது மிகவும் ரிஸ்க் ஆகும். ஏனென்றால் முதல் சுற்றுப்போட்டிகளில் நெதர்லாந்து அணி அசுரத்தனமான ஃபார்மில் இருந்தது குறிப்பிடத்தக்கது.