தென்னாப்பிரிக்க சீரிஸ்
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூன் 17ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதே போல அயர்லாந்து அணியுடன் ஜூன் 26 மற்றும் 28ம் தேதிகளில் 2 டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் தேர்வு தான் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தந்துவிட்டு, ஐபிஎல் தொடரில் கலக்கி வீரர்களுக்கு வாய்ப்பு தருகின்றனர்.
புதிய பயிற்சியாளர்
இந்நிலையில் இந்த இரு தொடர்களில் இருந்து ராகுல் டிராவிட்டும் வெளியேறியுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு வரும் ஜூலை மாதம் செல்ல வேண்டும் என்பதால் அவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு தொடர்களுக்கும் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார்.
பழைய ப்ளான்
இந்திய அணி ஏற்கனவே கடந்தாண்டு இங்கிலாந்து - இலங்கை என இரண்டு தொடர்களுக்கு இரண்டு வெவ்வேறு அணிகளை உருவாக்கியிருந்தது. அதே போன்று தான் தற்போதும் நடைபெறுகிறது. லக்ஷ்மண் தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். எனவே வீரர்களை கையாள்வது அவருக்கு மிகவும் சுலபமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
யார் கேப்டன்?
ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், பும்ரா என அனைவருக்கும் ஓய்வு தரப்பட்டுள்ளதால், கேப்டன்சி பதவி ஷிகர் தவானுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. அப்படி இல்லையென்றால் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் கேப்டன்சி கதவுகள் தட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.