பெர்த்தில் முதல் வீரர்
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த், டபிள்யூ.ஏ.சி.ஏ மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ரோகித் ஷர்மா.
யுவராஜை முந்தினார்
ஆஸ்திரேலிய மண்ணில், ஒருநாள் போட்டியொன்றில், அதிகபட்ச ரன் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமை ரோகித்துக்கு கிடைத்துள்ளது. முன்பு, 2004ல், சிட்னியில், யுவராஜ்சிங் 139 ரன்கள் விளாசியிருந்தது பெஸ்ட்டாக இருந்தது.
பெர்த்தில் 2வது பெரிய ஸ்கோர்
ரோகித் விளாசிய 171 ரன் என்பது பெர்த் மைதானத்தில் 2வது அதிகபட்ச ஸ்கோராகும். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் குட்டி அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸி. வீரர் டேவிட் வார்னர் இந்த மைதானத்தில் 178 ரன்கள் அடித்து இப்பட்டியலில் முதலிடத்திலுள்ளார்.
ஆயிரத்தில் ஒருவர்
இப்போட்டியில் அடித்த ரன்களையும் சேர்த்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ரன்களை அவர் கடந்தார். 19 போட்டிகளில் இந்த ரன்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
லட்சுமணனுடன் பங்கு
ஆஸ்திரேலிய மண்ணில், 3 செஞ்சுரிகள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில், லட்சுமணனுடன், ரோகித் ஷர்மா ஒரே இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அடிச்சா 150தான்
ரோகித்ஷர்மா மொத்தம் 4 முறை 150க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதில் அதிகபட்சம் என்பது உலக சாதனை ரன்னான 264 ஆகும். கிறிஸ் கெயில், சனத் ஜெயசூர்யா ஆகியோரும் 4 முறை 150 ரன்களை கடந்த சாதனையாளர்கள். சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 5 முறை இச்சாதனையை செய்து முதலிடத்திலுள்ளார்.
அதிக சதங்கள்
ரோகித் ஷர்மா மொத்தம் விளாசியுள்ள 9 சதங்களில், 4 சதங்கள் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வந்தவை. லட்சுமணனும் ஆஸி.க்கு எதிராக 4 சதங்கள் அடித்துள்ளார். இந்திய வீரர்களில் சச்சின்தான் ஆஸி.க்கு எதிராக 9 சதங்கள் விளாசி முதலிடத்திலுள்ளார். ரோகித் மற்றும் லட்சுமணனுக்கு இதில் இரண்டாவது இடம்.
சிம்ம சொப்பனம்
இன்றைய போட்டியில் 2வது விக்கெட்டுக்கு ரோகித்-கோஹ்லி இணைந்து 207 ரன்களை குவித்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2வது விக்கெட்டுக்கு இந்திய வீரர்கள் குவித்த அதிகபட்ச ரன் இது. முன்னதாக 2001ம் ஆண்டு இந்தூரில் சச்சின்-லட்சுமணன் இணைந்து, 199 ரன்கள் குவித்திருந்தனர்.
பலே பார்ட்னர்ஷிப்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2வது விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்துள்ளது என்பது, சர்வதேச அளவில், 3வது உச்சபட்ச ஸ்கோராகும்.
முன்னேற்றம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இந்திய வீரர்கள் 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பில் ரன் குவித்திருப்பது, இது 2வது முறையாகும். முன்னதாக, சிட்னியில், 2004ம் ஆண்டு, யுவராஜ்சிங்-லட்சுமணன் இணைந்து 213 ரன்கள் பார்னர்ஷிப் உருவாக்கியிருந்தனர்.
அதிக ஸ்கோர்
ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்தியா குவித்த அதிகபட்ச ஸ்கோர் என்பது, இன்றைய ஆட்டத்தில் சேர்த்த 309 ரன்கள்தான். முன்பு, 2004ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த போட்டியில், இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாகும்.