டெல்லி: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் வரும் 7ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகள்தான், உலகிலேயே மிகப் பெரிய மற்றும் பிரபலமான டி-20 போட்டியாகும்.
இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் திரும்புவதால், இந்த சீசன் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் இடையேயும், வீரர்கள் இடையேயும் ஏற்படுத்தியுள்ளது.
மிகப் பெரிய ரசிகர் படையைக் கொண்டுள்ள கேப்டன் கூல் டோணியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடரின் முதல் ஆட்டத்தில் விளையாடுகிறது.
மும்பை வாங்கடே மைதானத்தில், 7ம் தேதி இரவு 8 மணிக்கு துவங்கும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் சந்திக்க உள்ளது. அன்றைய தினம் மாலையில் துவக்க விழாவும் நடக்கிறது.
இந்த சீசனுக்கான லீக் போட்டிகளுக்கான டிக்கெட் ரூ.500ல் இருந்து மிகவும் அதிகபட்சமாக ரூ.26,000 வரை விற்கப்படுகிறது
இதற்கான டிக்கெட்களை www.Bookmyshow.com இணையதளத்தில் ஆன்லைனில் புக் செய்யலாம். இதைத் தவிர, போட்டியில் விளையாடும் 8 அணிகளும் தங்களுடைய இணையதளத்தில் இதற்கான வசதியை செய்துள்ளன.
போட்டி நடைபெறும் ஊர்களில் சிறப்பு கவுண்டர்களை, அணிகள் அமைத்துள்ளன. போட்டி நடைபெறும் மைதானத்திலும் டிக்கெட் கிடைக்கும்.