மிக்சருடனான பந்தம்
ஒவ்வொரு வருடமும் சிஎஸ்கே அணி, அதன் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தலைமையில் குழுவாக களமிறங்கும். எப்போதுமே ஏலத்தில் நீண்ட நேரம் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டே அமைதியாகவே இருக்கும் அவர்கள், கடைசி நேரத்தில் தான் மலமலவென வீரர்களை தூக்குவார்கள். சில சமயங்களில் முக்கிய வீரர்களை எடுக்க தவறினால் மிக்சர் சாப்பிடவா அங்கு போனீர்கள் என ரசிகர்கள் கொந்தளித்ததும் உண்டு.
ஆச்சரிய விஷயம்
கோடிகளில் செலவளிக்கும் அந்த அணி ஏன் வேறு திண்பண்டங்களை சாப்பிடாமல் மிக்சர் மீதே கவனம் செலுத்துகிறார்கள் என்ற கேள்வி எழலாம். அதுவும் ஸ்டீஃபன் ப்ளெமிங் உள்ளிட்ட அயல்நாட்டு கோச்-களும் அதையே சாப்பிடுவது கூடுதல் கவனத்தை பெறும். அப்படி மிக்சர் சாப்பிடுவதால் என்னதான் நல்லது உள்ளது என்பதை இங்கு காண்போம்.
முதல் இரு காரணங்கள்
மிக்சர்களில் பலவகைகள் உள்ளன. ஆனால் எந்த வகையாக இருந்தாலும் மிக்சர் செய்ய அடிப்படை பொருள் கடலை மாவு. கடலை மாவில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். 2வது காரணம் கடலை மாவில் வைட்டமின் பி6 அதிகம் இருப்பது தான். பொதுவாக வைட்டமின் பி6 செரடோனின் என்ற ஹார்மோனை சுரக்க உதவும். செர்டோனின் ஹார்மோன் சந்தோஷமான மனநிலையைக் கொடுக்கும், ஏற்ற இறக்க மனநிலை இல்லாமல் சீராக இருக்க உதவும்.
இதயத்திற்கு நல்லது
3வது மற்றும் 4வது காரணங்களாக பார்க்கப்படுவதும் மிக்சரில் சேர்க்கப்படும் இதர பொருட்கள் தான். மிச்சரில் முந்திரி அதிகம் சேர்க்கப்படும். முந்திரியை கொஞ்சமாக எடுத்துக்கொண்டால் கூட இதயம் பலவீனமாக இருப்பவர்களுக்கு உதவும். பதற்றம் அதிகம் நிறைந்துள்ள ஐபிஎல் ஏலத்தில் எந்தவித பதற்றமும் ஏற்படாமல் இருக்க முந்திரி உதவுகிறது. மிச்சரில் சேர்க்கப்படும் வேர்க்கடலையினால் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினெரல்ஸ் கிடைத்து துடிப்புடன் இருக்க உதவுகிறது.
மனிதனின் இயல்பு
கடைசி மற்றும் 5வது முக்கிய காரணம் மனிதர்களின் இயல்பு தான். ஏலம் நடைபெறும் அரங்கம் பெரும்பாலும் மிகுந்த அமைதியுடன் காணப்படும். ஏலம் விடுபவரை தவிர வேறு யாரும் சத்தமாக கூட பேசிக்கொள்ள மாட்டார்கள். பலகைகள் மூலம் தான் ஏலம் கேட்பார்கள். இவ்வளவு அமைதியாக இருப்பதால் மனிதர்களுக்கு உடற்சோர்வு ஏற்பட்டு தூக்கம் வரலாம். எனவே கவனம் சிதறாமல் இருக்க, தூக்கத்தை கலைக்க மிக்சரை வாயில் அசைபோடுக்கொள்ளலாம்.