சச்சினுக்கு இடமில்லை
இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். உலகக்கோப்பை தொடரில் 44 இன்னிங்க்ஸ்களில் 2278 ரன்கள் குவித்துள்ளார் சச்சின். அவரது சராசரி 56.95 ஆகும். 6 சதம், 16 அரைசதம் அடங்கும். அவருக்கு தன் சிறந்த வீரர்கள் அடங்கிய உலகக்கோப்பை அணியில் இடம் தரவில்லை அப்ரிடி.
தோனியும் இல்லை
அதே போல, ஒரு உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த பினிஷரான தோனிக்கும் தன் அணியில் இடம் அளிக்கவில்லை அப்ரிடி. அப்புறம் யாருக்குத் தான் இடம் கொடுத்துள்ளார்?
ஒரே ஒரு இந்தியர்
அப்ரிடி அறிவித்துள்ள சிறந்த உலகக்கோப்பை அணியில் 5 வீரர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். 4 வீரர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். போனால் போகிறது என தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் இருந்து தலா ஒரு வீரருக்கு தன் அணியில் இடம் கொடுத்துள்ளார்.
அப்ரிடியின் அணி
அப்ரிடியின் உலகக்கோப்பை அணி - சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், விராட் கோலி, இன்சமாம் உல் ஹக், ஜாக்கஸ் காலிஸ், வாசிம் அக்ரம், கிளென் மெக்கிராத், ஷேன் வார்னே, ஷோயப் அக்தர், சக்லைன் முஷ்டாக்.
கோலி உள்ளே.. சச்சின் வெளியே
இந்த அணியில் தோனிக்கு இடம் கொடுக்காதது கூட பரவாயில்லை. சச்சினுக்கு இடம் இல்லை என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஒருவேளை, இந்தியர்கள் என்ற கோட்டாவில் விராட் கோலியை சேர்த்து விட்டு, சச்சினை கழற்றி விட்டு விட்டாரோ?
ரசிகர்கள் கேள்வி
இன்சமாம் உல் ஹக்கை விட சச்சின் சிறந்த பேட்ஸ்மேன். இந்த நிலையில், சச்சினுக்கு இடம் அளிக்காமல் உலகின் சிறந்த அணி தேர்வு செய்தது போங்கு ஆட்டம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அப்ரிடியை வசை பாடி வருகிறார்கள்.