பீலே உடல்நிலை
82 வயதாகும் பீலேவுக்கு குடல் பகுதியில் ஒரு புற்றுநோய் கட்டி இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது. இதன்பின்னர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து இதய செயலழிப்பு மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் பீலே
இதனால் கால்பந்து ஜாம்பவான் பீலே அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன் திடீரென பீலே, ஆல்பர்ட் எய்ன்ஸ்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், பீலேவுக்கு பெரிய பிரச்சினைகள் இல்லை. விரைவில் வீடு திரும்புவார் என்று அவரது மகள் சமூக வலைதளம் மூலம் விளக்கம் அளித்திருந்தார். இதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
மருத்துவமனை அறிக்கை
இந்த நிலையில் பீலேவின் உடல்நிலை மீண்டும் மோசமான சூழலுக்கு சென்றுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான நோய்த்தடுப்பு பிரிவுக்கு பீலே மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பாப்பே ட்வீட்
பீலேவுக்கு வழங்கப்பட்டு வந்த கீமோதெரபி சிகிச்சை பலனளிக்காத வகையில், மருத்துவமனை தரப்பில் வேறு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் பீலேவின் ரசிகர்கள் பலரும் பீலேவுக்கு பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளார். இதனிடையே பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே, Pray for the King என்று பீலே மீண்டு வருவதற்காக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பீலேவின் உடல்நிலை மோசமாகியுள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.