பிரேசிலின் அடையாளம்
ஒவ்வொரு கால்பந்து ரசிகனின் சுவாசித்தலும் பீலேவின் பெயர் கலந்தே இருக்கும் என்பது பழமொழி. அந்த அளவிற்கு கால்பந்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியதோடு, பிரேசில் நாட்டின் அடையாளமாகவும் பீலே இருந்து வருகிறார். 17 வயதில் உலகக்கோப்பையை வென்றவர், இளம் வயதில் உலகக்கோப்பை ஹாட்ரிக் அடித்தவர், இளம் வயதில் உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடியவர் என்று பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
பீலேவின் சாதனை
அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற பெருமையை பிரேசில் ஜாம்பவான் பீலே பெற்றுள்ளார். பீலே தனது முதல் உலகக் கோப்பையை 1958ல் ஸ்வீடனில் வென்றார், இது பிரேசிலின் முதல் வெற்றி கோப்பையாகும். பின்னர் 1962ல் பிரேசில் வெற்றிபெற உதவினார். இறுதியாக 1970ல் தனது அணியை வெற்றி மேடைக்கு அழைத்துச் சென்றார். அதுவே அவரது இறுதிப் போட்டியாகவும் அமைந்தது.
பீலே உடல்நிலை
தொடர்ந்து பிரேசிலில் இருந்து வெளியேற மறுத்து, அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வந்தவர். 82 வயதாகும் பீலேவுக்கு குடல் பகுதியில் ஒரு புற்றுநோய் கட்டி இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது. இதன்பின்னர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து இதய செயலழிப்பு மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் அனுமதி
இதனால் கால்பந்து ஜாம்பவான் பீலே அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை திடீரென பீலே, ஆல்பர்ட் எய்ன்ஸ்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மகள் கெலி நாசிமெண்டோ கூறுகையில், அப்பாவின் உடல்நலத்தை மதிப்பீடு செய்வதற்காக சில பரிசோதனைகள் செய்யப்பட்டது.
மகள் கொடுத்த அப்டேட்
அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. விரைவில் அவருடனான புகைப்படத்தை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பீலேவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வரும் நிலையில், பீலேவின் உடல்நிலை மோசமாகியுள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.