ஜப்பான் வீரர்களின் பதில்
இந்த நிலையில் ஜப்பான் அணி வீரர்களிடம் உலகக்கோப்பையில் உங்கள் கனவு என்ன என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உலகக்கோப்பை தொடர் முன்னாள் சாம்பியன் அணிகளான ஜெர்மனி அல்லது ஸ்பெயினை வீழ்த்த வேண்டும் என்பதே கனவு என்று பதில் அளித்தனர்.
கனவை சாதித்த ஜப்பான்
ஆனால் ஜப்பான் அணி முதல் போட்டியில் ஜெர்மனியையும், கடைசி போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தனர். தொடர்ந்து காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றில் குரோஷியா அணியை எதிர்த்து ஜப்பான் இன்று விளையாடியது. இதில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர்.
ஜப்பான் முன்னிலை
இந்த நிலையில் ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டைசென் மெய்டா முதல் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாம் பாதியில் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தோடு குரோஷிய வீரர்கள் களமிறங்கினர்.
சமன் செய்த குரோஷியா
அதற்கு ஏற்ப குரோஷிய அணியின் கேப்டன் மோட்ரிச் மற்றும் பெரிசிக் இருவரும் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சித்து வந்தனர். இதன் பலனாக 55வது நிமிடத்தில் இவான் பெரிசிக் குரோஷிய அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தில் 1-1 என்று சமநிலை ஏற்பட்டது. இதன் பின்னர் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க செய்ய முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
30 நிமிடங்கள் கூடுதம் நேரம்
இரண்டாம் பாதியின் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் ஆட்டம் இருந்ததால், கூடுதலாக 30 நிமிடங்கள் நேரம் வழங்கப்பட்டது. ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் முதல்முறையாக கூடுதல் நேரம் இந்தப் போட்டியில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த 30 நிமிடங்களிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.
பெனால்டி ஷூட் அவுட்
இதனைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் முறை பின்பற்றப்பட்டது. இதில் அனுபவம் வாய்ந்த குரோஷிய வீரர்கள் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை பெற்றனர். குரோஷிய அணியின் கோல்கீப்பர் டாமினிக் லிவகோவிச் 2 ஷூட்களை அற்புதமாக கணித்து தடுத்து நிறுத்தினார். இந்த வெற்றியின் மூலம் குரோஷியா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஜப்பான் அணிக்கு பாராட்டு
இந்த தோல்வியால் மனமுடைந்த ஜப்பான் வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் வடித்தனர். இருந்தும் கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய குரோஷிய அணிக்கு கடைசி நிமிடம் வரை சவால் அளித்த ஜப்பான் வீரர்களுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்பு அதிகமாகி வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.