கத்தாரின் கட்டுப்பாடுகள்
இன்று இரவு நடைபெறும் முதல் போட்டியில் கத்தார் அணியை எதிர்த்து ஈகுவடார் அணி மோத உள்ளது. பொதுவாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றால் அது பார்டி, பப் என கொண்டாட்டம் மிகுந்ததாகவே இருக்கும். ஆனால், தீவிர இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான கத்தாரில் உலகக் கோப்பைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
சமபால் ஈர்ப்பாளர்களுக்கு தடை
குறிப்பாக மதுபானம், போதைப்பொருள், உடலுறவு, ஆடைக் கட்டுப்பாடு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், வெளிநாட்டு ரசிகர்கள் உள்ளூர் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு, ஃபிபா சர்ச்சை, எல்ஜிபிடி+ தடை ஆகியவை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
கலகத்தில் ஜெர்மனி, டென்மார்க்
குறிப்பாக கால்பந்து வீரர்கள் பலரும் எல்ஜிபிடி+ சமூகத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக பேசி வருகின்றனர். இந்த நிலையில் கத்தார் அரசின் எல்ஜிபிடி+ தடைக்கு எதிராக ஜெர்மனி மற்றும் டென்மார்க் அணியின் கேப்டன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கால்பந்து போட்டியில் களமிறங்கும் போது எல்ஜிபிடி+ சமூகத்திற்கு ஆதரவாக ஒன் லவ் பட்டை அணிந்து களமிறங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
ஃபிபா எச்சரிக்கை
ஏற்கனவே ஃபிபா அமைப்பு சார்பாக கால்பந்து வீரர்கள் யாரும் அரசியல், மொழி, மதம் உள்ளிட்ட எவ்வித சர்ச்சைகளை பற்றியும் சிந்திக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தது. அதேபோல் கத்தார் நாட்டில் சமபால் ஈர்ப்பாளர்கள் என்று தெரிய வந்தால், அவர்களை ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் வகையில் சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.