கத்தாரின் கட்டுப்பாடுகள்
இதனிடையே தீவிர இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான கத்தாரில் உலகக்கோப்பை ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக மதுபானம், போதைப்பொருள், உடலுறவு, ஆடைக் கட்டுப்பாடு, தன்பால் ஈர்ப்புக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், வெளிநாட்டு ரசிகர்கள் உள்ளூர் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
ஒன் லவ் பட்டை
இதனால் கால்பந்து வீரர்கள் பலரும் எல்ஜிபிடி+ சமூகத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக பேசினர். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் களமிறங்கும் போது எல்ஜிபிடி+ சமூகத்திற்கு ஆதரவாக கைகளில் ஒன் லவ் பட்டை அணிந்து களமிறங்க உள்ளதாக அறிவித்தனர்.ஆனால் ஃபிஃபா அமைப்பு சார்பாக விளையாட்டு வீரர்கள் ஒன் வல் பட்டையுடன் களமிறங்கினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.
ஜெர்மனி எதிர்ப்பு
ஃபிஃபாவின் எச்சரிக்கைக்கு பின் இங்கிலாந்து, வேல்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகள் ஒன் லவ் பட்டை அணியும் முடிவை கைவிட்டனர். இது கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒன் லவ் பட்டை அணிய தடை விதித்ததற்கு எதிராக ஜெர்மனி வீரர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஏன் வாயை மூடினர்?
ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய ஜெர்மனி அணி, ஒன் லவ் பட்டை அணிய தடை விதித்ததற்கு எதிராக தங்களது வாயை மூடி எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுதொடர்பாக ஜெர்மனி கால்பந்து அமைப்பு சார்பாக, ஒன் லவ் விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் சேர்ந்து, எங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் என்று விரும்பினோம். இது ஒரு அரசியல் அறிக்கையை வெளியிடுவது பற்றியது அல்ல. மனித உரிமைகள் எதற்காகவும் சமரசம் செய்ய முடியாதவை. அதனால் இந்த எதிர்ப்பு எங்களுக்கு முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜெர்மனியின் சமூக நலத்துறை அமைச்சர் நான்சி, கேலரியில் ஒன் லவ் பட்டை அணிந்து அமர்ந்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.