ரியோ மைதானத்தில் தண்ணீருக்காக தவித்த ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல்.. !
சென்னை: ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டு நாடு திரும்பிய இந்திய தடகள வீராங்கனை ஒ.பி.ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக்ஸ் மராத்தான் போட்டியின் போது இந்தியா சார்பில் தனக்கு தண்ணீர் கூட வழங்கவில்லை எனவும், இதனால் தான் உயிருக்கே போராட வேண்டிய நிலை இருந்ததாகவும் புகார் கூறியிருந்தார் வீராங்கனை ஒ.பி.ஜெய்ஷா. இது நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் போட்டியில் ஒ.பி.ஜெய்ஷா 89-வது இடத்தை பிடித்திருந்தார்.

இதனிடையே பெங்களூரு திரும்பிய ஜெய்ஷாவுக்கு காய்ச்சலும், உடல் வலியும் இருந்ததால், அங்குள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தனது ரத்த மாதிரியை எடுக்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து விளையாட்டுத்துறை அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்திய பின்னரே அவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது.
மேலும் அவரது ரத்த மாதிரியானது கடந்த புதன்கிழமை ராஜீவ் காந்தி மார்பு நோய்கள் இன்ஸ்டிடியூட்டுக்கு பரிசோதனை அனுப்பட்ட நிலையில், நேற்று அவருக்கு அவருக்கு (H1N1) பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரியோவில் இருந்து திரும்பிய மற்றொரு இந்திய தடகள வீராங்கனை சுதாசிங்கிற்கு பன்றி காய்ச்சல் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த 20-ந் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நாடு திரும்பியதும் ஜிகா வைரஸ் தாக்கியிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்து கொண்டார். ஆனால் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.


Click it and Unblock the Notifications