பிர்மிங்கம்: காமன்வெல்த் பாரா பவர்லிஃப்டிங் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று இந்திய வீரர் சாதனை படைத்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பளுதூக்குதலில் இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து வந்த சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியிலும் தங்கம் கிடைத்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான பளுதூக்குதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் சுதிர் கலந்துக்கொண்டார். தனது முதல் வாய்ப்பில் 208 கிலோ எடையை தூக்கி அசத்திய அவர், இரண்டாவது வாய்ப்பில் 212 கிலோ எடையை தூக்கி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார். இதனால் 3வது வாய்ப்பில் அசால்டாக தூக்கிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
3வது வாய்ப்பில் 217 கிலோ எடையை தூக்க முயன்றார். ஆனால் தூக்க முடியாமல் போனது. எனினும் முதல் 2 வாய்ப்புகளில் தூக்கிய கணக்கிலேயே சுதிர் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதற்காக இந்தியாவில் இருந்து பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். 27 வயதாகும் சுதிர், போலியோவின் தாக்கத்தால் கால்கள் செயல்படாமல் போனது. இதற்கு முன்னர் ஆசிய பாரா கேம்ஸில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்த சுதிர் தற்போது காமன்வெல்த்-லும் சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.