ஜாம்பவான்களின் சங்கமம்
இரு அணிகளும் அப்போது ஜாம்பவான்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. நமது அணியில் கபில்தேவ், ஸ்ரீகாந்த், அஸாருதீன், மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா, மஞ்ச்ரேகர் என நிரம்பியிருந்தனர்.
"குட்டி பகவதி" சச்சின்!
குட்டி ஜாம்பவான் சச்சின் கலக்கிய போட்டி அது. அவர்தான் ஆட்டநாயகனும் கூட.
மியான்தத் - இம்ரான் கான்
பாகிஸ்தான் அணியிலும் ஜாம்பவான்கள் நிறைய. இம்ரான் கான், ஜாவேத் மியான்தத், அமர் சொஹைல், இன்சமாம் உல் ஹக், சலீம் மாலிக், வாசிம் அக்ரம், முஷ்டாக் அகமது என நிரம்பியிருந்தனர்.
முதல் மோதல்
இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பைத் தொடரில் சந்தித்த இந்தப் போட்டி சிட்னியில் 1992ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி நடந்தது. முதலில் இந்தியா பேட் செய்தது. இரு அணிகளுக்கும் தலா 49 ஓவர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது.
பந்துகளை தின்று குவித்த ஸ்ரீகாந்த்
இந்தியத் தரப்பில் அஜடய் ஜடேஜாவும், ஸ்ரீகாந்த்தும் ஆட்டத்தைத் தொடங்கினர். வழக்கம் போல ஸ்ரீகாந்த் அதிரடியாக ஆடாமல் பயங்கரமாக கட்டையைப் போட்ட போட்டி இது. 41 பந்துகளைத் தின்று தீர்த்த ஸ்ரீகாந்த், வெறும் 5 ரன்களை மட்டுமே எடுத்து விட்டு, சூரியனைப் பார்த்து மூ்க்கை உறிஞ்சியபடி கிளம்பிச் சென்றார்.
பயங்கர கட்டையைப் போட்ட ஜடேஜா
இவர் இப்படி என்றால் அந்தப் பக்கம் ஜடேஜா படு பயங்கரமாக கட்டையைப் போட்டார். 118 பந்துகளைச் சாப்பிட்ட அவர் 46 ரன்களை எடுத்தார்.
கேப்டன் அஸாருதீன்
கேப்டன் அஸாருதீன் சற்று பரவாயில்லை என்று சொல்லும்படியாக 61 பந்துகளைச் சந்தித்து 32 ரன்களை எடுத்தார். வினோத் காம்ப்ளியின் பங்கு 60 பந்துகளுக்கு 24.
சச்சினும் சாப்பிட்டாரே
சச்சின் மட்டும் சும்மா இருப்பாரா.. அவரும் நிறையவே சாப்பிட்டார். ஆனால் அவர் மட்டும்தான் இப்போட்டியல் அரை சதம் போட்டவர். 91 பந்துகளைச் சாப்பிட்ட சச்சின் 54 ரன்களுடன் வெளியேறினார்.
கபில்தேவ் அதிரடி
ஆல் ரவுண்டர் கபில்தேவ் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 35 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார். இப்படியாக தட்டுத் தடுமாறி ஆடிய இந்தியா 49 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 216 ரன்களில் இன்னிங்ஸை முடித்தது.
வெறும் கையுடன் திரும்பிய இம்ரான், அக்ரம்
இமரபாகிஸ்தான் பந்து வீச்சாளர்களில் முஷ்டாக் அகமது 3 விக்கெட்களை எடுத்தார். ஆகிப் ஜாவித்துக்கு 2 விக்கெட்கள் கிடைத்தன. வாசிம் ஹைதர் ஒரு விக்கெட் எடுத்தார். வாசிம் அக்ரம், இம்ரான் கான் ஆகியோருக்கு விக்கட்டே கிடைக்கவில்லை.
புயல் வேக பிரபாகர்
பின்னர் ஆட வந்த பாகிஸ்தானுக்கு நமது பந்து வீச்சாளர்கள் சரியான நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக மனோஜ் பிரபாகர் அபாரமாக பந்து வீசினார். முக்கிய வீரரான இன்சமாம் உல் ஹக்கை கபில் தேவ் வீழ்த்த, ஜாகித் பைசலை பிரபாகர் தூக்கினார்.
அடித்து நொறுக்கி ஆமிர் சொஹைல்
ஆனால் மறுபக்கம் ஆமிர் சொஹைல் அதிரடியாக ஆடி வந்தார். 62 ரன்களை எடுத்த அவரை சச்சின் டெண்டுல்கரின் பந்து காலி செய்தது.
மிரட்டிய மியான்தத்
இந்த நிலையில்தான் மியான்தத் கட்டையைப் போட்டபடி பாகிஸ்தான் நிலை குலையாமல் தடுக்க போராட ஆரம்பித்தார். போராட்டத்தோடு போராட்டமாக, இந்திய வீரர்களை சீண்டவும் ஆரம்பித்தார்.
கங்காரு போல தாவி சேட்டை
விக்கெட் கீப்பர் கிரண் மோரையும், கேப்டன் அஸாருதீனையும் அவர் சீண்டியது இந்தப் போட்டியில்தான். குறிப்பாக கிரண் மோரைக் கிண்டலடிப்பது போல தவ்விக் குதித்ததும், பந்து வீச வந்த சச்சினை கையால் தடுத்து நிறுத்தி விட்டு, கிரண் மோரைப் பார்த்து தி்ரும்பி நின்று அவருடன் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதும் அப்போது பரபரப்பை ஏற்படுத்தின.
போட்டியில் பதட்டம்
பதட்டத்தை ஏற்படுத்திய அவர் குறித்து அஸாருதீன் மைதானத்திலேயே புகார் கூற போட்டி சிறிது நேரம் நின்றது. பின்னர் அமைதி திரும்பியது. மியான்தத் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரீநாத் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். அவர் போன பிறகு பாகிஸ்தான் வேகமாக சரிந்து வீழ்ந்தது.
ஆனாலும் வெற்றி நமக்கே
48.1 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆல் அவுட் செய்யப்பட்டது பாகிஸ்தான். இந்தியத் தரப்பில் கபில்தேவ், மனோஜ் பிரபாகர், ஸ்ரீநாத் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், சச்சின், வெங்கடபதி ராஜு ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
நாயகன் சச்சின்
ஆட்ட நாயகனாக சச்சின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானை இந்தியா முதல் முறையாக வீழ்த்திய போட்டியாகும்.