குடிகார டிரைவரால் விபத்தில் காலை இழந்தவர் "தங்க மகன்" மாரியப்பன் தங்கவேலு..!
ரியோ: ரியோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். 5 வயதில் கால்கள் ஊனமடைந்து அதனால் முடங்கிப் போகாமல் உயரம் தாண்டி இன்று சாதனை நாயகனாக திகழ்கிறார்.
சேலத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பெரியவடுகம்பட்டி மாரியப்பனின் சொந்த ஊர். இவரது பெற்றேர் தங்கவேல் - சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
5 வயதில் ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்வதற்காக சாலையோரம் சென்று கொண்டிருந்த மாரியப்பன் மீதுஅந்த வழியாக வந்த லாரி, மாரியப்பன் மீது மோத, மாரியப்பனின் வலது கால் நசுங்கியது கூழானது. டிரைவர் குடிபோதையில் இருந்ததாக சொன்னார்கள்.
மகனின் மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.3 லட்சம் கடனை இன்னுமும் கட்டி வருகிறார்.

ஆசிரியர்கள் ஊக்கம்
கால் இல்லை என்பதற்காக மாரியப்பன் முடங்கிவிட வில்லை. உயரம் தாண்டுதலில் முழு மூச்சில் ஈடுபட்டார். பள்ளி பருவத்தில் மாரியப்பனின் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார்.

குவித்த பதக்கங்கள்
மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாரியப்பன். கடந்த 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்தார்.

சாதனை நாயகன்
சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார் மாரியப்பன். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் என் நண்பர்கள் என்னால் தாண்ட முடியும் என நம்பவில்லை. முதல் முறையாக தாண்டியதும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், நான் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்லோரும் ஆதரவு அளிக்கத் துவங்கினர் என்று சொல்லும் மாரியப்பனின் வயது 21

விடாமுயற்சி
2013ல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் தாண்டிய விதம், கோச் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக அன்று முதல், மாரியப்பனுக்கு சிறப்பு பயிற்சி அளித்து கவனித்து வருகிறார். பெங்களூருவில் வைத்து முழு மூச்சாக பயிற்சி கொடுத்தார். இதன் விளைவாக, துனிஸியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் 1.78 மீ., உயரம் தாண்டி, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தார்.

தங்கமகன் மாரியப்பன்
பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் பங்கேற்க நித உதவி வழங்கி ஊக்கம் அளித்து வரும், வாலிபால் பெடரேஷன் ஆப் இந்தியா தலைவர் சந்திரசேகரன் மற்றும் பயிற்சியாளர் சத்யநாராயணன் ஆகியோர் மாரியப்பன் தங்கம் வெல்வால் என்று நம்பிக்கையுடன் பேசினர். பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் ஒரே தாவலில், உலகின் பார்வையை தன் வசம் ஈர்த்து, 100 சதவீதம் வெற்றியுடன், தங்கம் வென்று தாயகம் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அவர் வெற்றி பெற உங்களுடன் சேர்ந்து, நாங்களும் கடவுளை பிராத்திக்கிறோம் என்று கூறினர். அவர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. தங்கம் வென்று தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார் மாரியப்பன் தங்கவேலு.


Click it and Unblock the Notifications