திடீர்னு வேலையை விட்டு விரட்டி விட்ட மாதிரியே ஒரு ஃபீலிங்.. ஏமாந்து போன சானியா மிர்ஸா
பெங்களூர்: கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியன் வெல்ஸ் போட்டித் தொடர் ரத்தாகியுள்ளது. இதையடுத்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஏமாற்றம் தெரிவித்துள்ளார். அதையும் கூட ஜாலியாக கலாய்த்து கூறி கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
தொடர் ரத்தாகி விட்டதால் திடீரென வேலையை இழந்தது போலவே ஒரு ஃபீலிங்காக இருக்கிறது என்று கூறியுள்ளார் சானியா மிர்ஸா. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து வீரர்களைக் காக்கவே இதுபோன்ற ரத்து நடவடிக்கையை எடுத்துள்ளது இந்தியன் வெல்ஸ் நிர்வாகம்.
இதுகுறித்து சானியா மிர்ஸா கூறுகையில், " திடீரென எங்க எல்லோரையும் வேலையை விட்டு அனுப்பியது போல இருக்கு. என்ன நடக்கிறது என்று தெரியாமல் அங்குமிங்கும் உலவிக் கொண்டுள்ளோம்" என்று கூறியுள்ளார் சானியா.

சானியா மிர்சா ஏமாற்றம்
சானியா மிர்ஸாவும், அவரது தந்தையும், பயிற்சியாளருமான இம்ரான் ஆகியோர் துபாயிலிருந்து கிட்டத்தட்ட 16 மணி நேரம் பயணம் செய்து கலிபோர்னியா சென்று பின்னர் அங்கிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து இந்தியன் வெல்ஸ் போயுள்ளனர். போன பிறகுதான் தெரிந்தது தொடர் ரத்தாகி விட்டது. இதனால் சானியா வெகுவாக ஏமாந்து போய் விட்டாராம்.

முதல் முறையாக ரத்து
முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று மகளிருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளை கலிபோர்னியா டெசர்ட்டில் நடத்தியுள்ளனர். தற்போது உள்ளூர் நிர்வாகம், கொரோனா அவசர நிலையை அறிவித்துள்ளது. கடந்த 46 வருடமாக இந்தியன்வெல்ஸ் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதுவரை போட்டி தொடர் ஒருமுறை கூட ரத்தானதில்லை. ஆனால் இந்த கொரோனா வந்து ரத்து செய்ய வைத்துள்ளது.

பயணத்தை ரத்து செய்த போபண்ணா
சானியா தவிர இந்தியாவிலிருந்து பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சுமித் நகர் ஆகியோரும் விளையாட ஆர்வமாக இருந்தனர். இவர்களும் கூட இந்தியன் வெல்ஸ் வந்து சேர்ந்து ஏமாந்து போனவர்கள். அதேசமயம், இரட்டையர் பிரிவில் ஆட திட்டமிட்டிருந்த ரோஹன் போபண்ணா ரத்து தகவலை அறிந்து தனது பயணத்தை தோஹாவிலேயே நிறுத்தி எஸ்கேப் ஆகி விட்டாராம். அங்கிருந்து அவர் பெங்களூர் திரும்பி விட்டார்.

ஏக்கத்தை வெளிப்படுத்திய சானியா
தனது 18 மாத குட்டிக் குழந்தை இஷானை பிரிந்துதான் இந்தப் போட்டித் தொடருக்காக வந்திருந்தார் சானியா. அப்படி வந்தும் விளையாட முடியாமல் போய் விட்டதே என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் சானியா. தற்போது அவர் ஹைதராபாத் திரும்பவுள்ளார். எப்படா என் மகனைப் பார்ப்பேன் என்றிருக்கிறது என்று கூறியுள்ளார் சானியா.

மகனை பிரிந்துவந்த சானியா
ஏன் மகனை தூக்கிக் கொண்டு வரவில்லை என்ற கேள்விக்கு, இவ்வளவு மணி நேரம் பயணம் மேற்கொள்ள வைத்தால் அவனுக்கு கஷ்டம். எனவேதான் வேறு வழியில்லாமல் விட்டு விட்டு வந்தேன். அதுவே எனக்கு மனசு கேட்கலைதான். இருந்தாலும் வேறு வழியில்லாமல் வந்தேன். இங்கு வந்தால் போட்டியே ரத்தாகி விட்டது என்று கூறினார் சானியா மிர்ஸா.


Click it and Unblock the Notifications