தாய்மையையும், டென்னிஸையும் சமாளிக்க முடியாமல் அழுதேன்.. மனம் திறந்த செரீனா
வாஷிங்டன் : ஒரு தாயாகவும், அதே சமயம் டென்னிஸ் வீராங்கனையாகவும் சமாளிக்க முடியாமல் பலமுறை மனமுடைந்து இருக்கிறேன் என செரீனா வில்லியம்ஸ் கூறியிருக்கிறார்.
மேலும், என்னால் இதை கடக்க முடியுமென்றால், உங்களாலும் முடியும் என குழந்தைகளையும், வேலையையும் ஒரே நேரத்தில் கவனித்து வரும் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி உள்ளார்.

செரீனா அடுத்து யூ.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளார். கடந்த வருடம் குழந்தைப் பேறு காரணமாக சில மாதங்கள் ஓய்வில் இருந்த செரீனா, செப்டம்பர் மாதம் அலெக்சிஸ் ஒலிம்பியா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அதன் பின் சில மாதங்கள் கழித்து டென்னிஸ் களத்திற்கு திரும்பினார். எனினும், இதுவரை பட்டங்கள் எதுவும் வெல்லவில்லை. அதிகபட்சமாக இந்த ஆண்டின் பெண்கள் ஒற்றையர் விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டி வரை வந்து தோல்வி அடைந்தார்.
சில வாரங்கள் முன்பு, சிலிகான் வேலி கிளாசிக் தொடரில், தன் டென்னிஸ் வாழ்வின் மிக மோசமான தோல்வியை பதிவு செய்தார். சின்சினாட்டி மாஸ்டர்ஸ் தொடரில் இரண்டாவது சுற்றோடு வெளியேறினார்.
அவரது தொடர் தோல்விகளுக்கு, மனதளவில் ஒரு தாயாகவும், டென்னிஸ் வீராங்கனையாகவும் ஒரு சமநிலையை எட்ட முடியாததே காரணம் என கூறியுள்ளார் செரீனா.
இதுபற்றி கூறுகையில், “நான் இன்னும் எனக்காகவும், அவளுக்காகவும் (மகளுக்காக) இருக்க ஒரு சமநிலையை எட்ட கற்றுக்கொள்ள வேண்டும். அதைக் கற்றுக்கொண்டு இருக்கிறேன். பெண்கள் தங்களை இரண்டாவது, மூன்றாவது இடத்தில் வைத்துக் கொள்வதை முன்பு நான் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், அது மிகவும் எளிது. சில சமயம் நான் அழுது விடுவேன். மனமுடைந்தும் இருக்கிறேன். ஆனால், என்னால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்” என கூறி இருக்கிறார் செரீனா.
Story first published: Saturday, August 18, 2018, 9:59 [IST]
Other articles published on Aug 18, 2018


Click it and Unblock the Notifications