ஐபிஎல் தொடர்
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக கடந்த மே 29ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இறுதிப்போட்டி வரும் அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்.14ம் தேதி முடிவடைகிறது. எனவே வீரர்களை அமீரகம் அழைத்து ஏற்பாடுகளை செய்ய நேரம் சரியாக இருக்கும் எனத்தெரிகிறது.
நீடிக்கும் சிக்கல்
டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதற்கு தயாராகும் நோக்கில் அயல்நாட்டு அணிகள் சர்வதேச தொடர்களை ஏற்பாடு செய்து வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தங்களது வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்ப முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. இதே போல வங்கதேச வீரர்களும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் மீதம் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் வீரர்களை மட்டுமே ஐபிஎல் அணிகள் நம்பியுள்ளது.
புதிய திட்டம்
இந்நிலையில் அதற்கு ஆப்பு வைக்க திட்டமிட்டுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கும் அதே நேரத்தில் மும்முனை டி20 கிரிக்கெட் தொடரை நடத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. அதில் வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக இந்த தொடர் நடத்தப்படவுள்ளது. இந்த தொடர் நடைபெற்றால் இந்த 3 அணிகளின் நட்சத்திர வீரர்களும் அங்கு சென்றுவிடுவார்கள் என்பதால் ஐபிஎல் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அணிகளுக்கு பின்னடைவு
ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். அந்தவகையில் இந்த மும்முனை தொடர் நடைபெற்றால், நட்சத்திர வீரர்கள் வார்னர், ஸ்மித், பேட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஜெயி ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டோய்னிஸ், டேனியல் சாம்ச்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள்.