பரிசோதனை முயற்சிகள்
நியூசிலாந்து டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா பல பரிசோதனை முயற்சிகளை செய்தது. உலகக்கோப்பைக்கு வீரர்களை தயார் செய்யும் வகையில் பல வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த போட்டியில் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
குல்தீப் இறங்குவாரா?
இதனால், இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டு, க்ருனால் பண்டியா அல்லது சாஹல் இருவரில் ஒரு சுழற் பந்துவீச்சாளரை நீக்கி விட்டு குல்தீப் யாதவ்-ஐ அணியில் ஆட வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குல்தீப் பந்துவீச்சை எதிர்கொள்ள நியூசிலாந்து வீரர்கள் சிரமப்படுவார்கள் என்ற நிலை இருப்பதால், இந்த யோசனை கூறப்பட்டது.
ரசிகர்கள் கேள்வி
ஆனால், ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் எந்த மாற்றமும் இன்றி முதல் போட்டியில் ஆடிய அதே அணி களம் இறங்கியது. இதை கண்ட சில கிரிக்கெட் ரசிகர்கள், க்ருனால் பண்டியா முதல் போட்டியில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில் அவரை நீக்கி, குல்தீப் யாதவ்வுக்கு இடம் அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர்.
க்ருனால் அசத்தல் ஆட்டம்
க்ருனால் பண்டியா மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பதால் ரோஹித் இப்படி ஒரு தலைப் பட்சமாக நடந்து கொள்கிறார் என சிலர் விமர்சித்து உள்ளனர். எனினும், இந்த போட்டியில் க்ருனால் பண்டியா 3 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதனால், இந்த விமர்சனம் இப்போதைக்கு வலுவிழந்து விட்டது.
தப்பித்தார் ரோஹித்
ஒருவேளை இந்தியா இந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலோ அல்லது இந்தியா வென்றும் க்ருனால் மிக மோசமாக செயல்பட்டு இருந்தாலோ, இந்த குற்றச்சாட்டு உயிர் பெற்று இருக்கும். நல்ல வேளையாக தற்காலிக கேப்டன் ரோஹித் சர்மா இதில் இருந்து தப்பித்து விட்டார்.
ரோஹித் விளக்கம் என்ன?
ரோஹித் முதல் போட்டியில் ஆடிய அதே அணியை ஏன் களமிறக்குகிறோம் என போட்டி துவங்கும் முன் விளக்கமளித்தார். அப்போது அவர் இந்த அணியில் எந்த குழப்பமும் இல்லை. சரியான சமநிலையுடன் உள்ளது. மேலும், இளம் வீரர்களை வெளிநாட்டு சூழலில் பயன்படுத்தி பார்க்க அதே அணியுடன் களமிறங்குகிறோம் என தெரிவித்தார்.
ரோஹித் முடிவெடுக்க முடியுமா?
மேலும், அணித் தேர்வில் ரோஹித் மட்டுமே முடிவு எடுக்க முடியாது. ரவி சாஸ்திரி, தேர்வாளர்கள் எல்லோருடைய தலையீடும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.