ஒரே போட்டியில் ‘சதம்’ & ‘இரட்டை சதம்’.. சஹாலுக்கு கிடைத்த வாய்ப்பு.. முதல் போட்டியில் சுவாரஸ்யம்!
சென்னை: ஆர்சிபி வீரர் யுவேந்திர சஹால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் இன்றைய போட்டியில் 2 மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் பெங்களூரு அணி வீரர் யுவேந்திர சஹார் பந்துவீச்சில் சதம் மற்றும் இரட்டை சதத்தை ஒரே போட்டியில் எடுத்துள்ளார்.

மீண்டும் வாய்ப்பு
மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி ஃபீல்டிங் செய்து வருகிறது. இதில் இதில் ஆர்சிபி அணியின் முக்கிய பவுலரான யுவேந்திர சஹால், இங்கிலாந்து தொடரில் சொதப்பிய நிலையிலும் ஐபிஎல்-ல் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏனென்றால் கடந்த முறை ஆர்சிபி ப்ளே ஆஃப்-க்கு செல்ல சஹாலும் முக்கிய காரணமாக இருந்தார்.

சாதனை
அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் சொதப்பினாலும் முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். இன்றைய போட்டி யுவேந்திர சஹால் விளையாடும் 100வது ஐபிஎல் போட்டியாகும். கடந்த 2013ம் ஆண்டு மும்பை அணி மூலம் அறிமுகமான அவர் 100 போட்டிகளில் 121 விக்கெட்களை எடுத்துள்ளார். இதே போல யுவேந்திர சஹால் விளையாடும் 200வது டி20 போட்டி இதுவாகும். இதனால் ஒரே போட்டியில் இரண்டு மைல்கல்லை எட்டியுள்ளார்.

அச்சுறுத்தல்
ஐபிஎல் தொடரில் முக்கிய ஸ்பின்னர்களில் ஒருவராக சஹால் திகழ்ந்து வருகிறார். 2020 - 2021 ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த 6வது பவுலராக உள்ளார். யுவேந்திர சஹால் வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் இவர் எடுத்துள்ள 121 விக்கெட்களில் 87 விக்கெட்கள் வலது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி
இன்று போட்டி நடைபெறும் சென்னை பிட்ச்சானது ஸ்பின்னர்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும் எனக்கூறப்பட்டது. ஆனால் யுவேந்திர சஹால் இன்றைய போட்டியில் பெரியளவில் சோபிக்கவில்லை. அவர் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 41 ரன்களை விட்டுக்கொடுத்தார்.


Click it and Unblock the Notifications