மும்பை: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு லக் மேல் லக்காக அடித்தது. வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் 2 முறை அவர்களுக்கு சாதகமாக ஆட்டம் மாறியது.
குஜராத் அணி பேட்டிங் செய்யும் போது மேத்தீவ் வேட்க்கு மூன்றாம் நடுவர் தவறான முடிவை அறிவித்தார்.
அதற்கான காரணம், ஸ்நிக்கோ மீட்டர் தவறாக காண்பித்தது தான். இதனால் மேத்தீவ் வேட் செம கோபமாகி பேட்டை எல்லாம் கீழே அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார்.
அதே போன்று பெங்களூரு அணி பேட்டிங் செய்த போது 14.4வது ஓவரில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அதற்கு முந்தைய பந்தில் டுபிளஸிஸ் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அந்த பந்தை மேக்ஸ்வெல் எதிர்கொண்டார். அப்போது ரஷித் கான் வீசிய பந்து ஸ்டம்பை தாக்கியது. எல்.இ.டி. விளக்குகளும் எரிந்தது.
இதனால் 2 பந்தில் 2 விக்கெட் விழுந்ததது என குஜராத் அணி ரசிகர்கள் கொண்டாட நடுவரோ, பவுண்டரி என எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்தார். அப்போது தான் தெரிந்தது பந்து ஸ்டம்பில் பட்டும், பெயில்ஸ் கீழே விழாமல் இருந்ததால் நடுவர், அதற்கு அவுட் தரவில்லை. இதனால் குஜராத் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதன் பின்னர், மேக்ஸ்வெல் ஒரு காட்டு காட்டினார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. எல்.இ.டி. விளக்குகள் பெயில்சில் பொறுத்தப்பட்டுள்ளதால், அதன் எடை அதிகரித்துவிட்டது. இதனால் பந்து பட்டும் ஸ்டம்ப் நகராமல் பெயில்ஸ் கீழே விழுவதில்லை. இது பந்துவீச்சாளர்களுக்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது. இதனால் இந்த விதியை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.