மீண்டும் ஐபிஎல்
ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு ஏதுவாக ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. வரும் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, கொரோனாவின் தாக்கம் 2 மாதங்களில் தான் அதிகரித்தது. எனவே 2 மாதங்களில் குறையவும் வாய்ப்புள்ளது. ஐபிஎல் குறித்து தற்போதே பேச முடியாது என தெரிவித்துள்ளார்.
நீஷம் அறிவிப்பு
இந்நிலையில் மீண்டும் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்றால் உடனடியாக பங்கேற்க தயார் என நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர்கள் 2 தனி விமானங்கள் மூலம் ஆக்லாந்து சென்றடைந்தனர். அங்கு 14 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு வீட்டிற்கு செல்லவுள்ளனர். இந்த சூழலில் தான் அவர் இதை தெரிவித்துள்ளார்.
தொழில் பக்தி
இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் உள்ள ரிஸ்க் குறித்து தெரிந்துதான் நான் ஐபிஎல்-ல் பங்கேற்க கையெழுத்திட்டேன். இதனால் தொடர் முடிவதற்கு முன்பு நானாக பாதியில் வெளியேறக்கூடாது என முடிவோடு இருந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள். எனக்கு என் தொழில் முக்கியம். நான் சுற்றுப்பயணம் செல்லும் நாடுகள் இக்கட்டான சூழலில் இருக்கலாம். ஆனால் களத்திற்கு சென்று நமது பணியை முடித்துக்கொடுக்க வேண்டும்.
கடினமான ஒன்று
மீண்டும் ஐபிஎல் தொடங்கினால் நான் நிச்சயம் பங்கேற்பேன். தடுப்பூசிகள் முழு அளவில் போடப்பட்டுவிட்டால், நிலைமை எப்படி மாறும் என்பது யாருக்கும் தெரியாது. தற்போது நாம் தனி விமானத்தில் சென்றால் கூட விமான நிலையம் டெர்மினலுக்கு தான் சென்றாக வேண்டும். அங்கு நமது விவரங்களை ஒருவருக்கு காட்டியே ஆக வேண்டும். எனவே எப்படியும் ஒரு தடைகல் இருக்கும். அனைத்தையும் சரியாக செய்வதென்பது கடினமான ஒன்று. நிறைய வீரர்கள் இருக்கும் போது நெருங்கி பழக தான் செய்வார்கள் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.