சொல்ல மறந்த கதை
தோனியின் சாதனைகள் நமக்கு நன்றாகவே தெரியும், தோனி ரயில்வேயில் பணிபுரிந்து வெற்றி பெற்ற கதையும் நமக்கு தெரியும். ஆனால் இரண்டுக்கும் நடுவே அவர் அணிக்குள் எப்படி வந்தார் என்ற யாரும் சொல்லாத கதை ஒன்று உண்டு.. அது உங்களுக்கு தெரியுமா? ரஞ்சி கோப்பையில் கலக்கிய அனைவருக்கும் இடம் கிடைப்பதில்லை. பிறகு எப்படி ராஞ்சியில் இருந்த தோனிக்கு மட்டும் இடம் கிடைத்தது.
விக்கெட் கீப்பர் தேவை
இந்திய கிரிக்கெட் அணியில் ரொம்ப காலமாகவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற ஆளே இல்லை. நமது டிராவிட் தான் அணிக்காக அந்த பொறுப்பை ஏற்று கொண்டார். டிராவிட்டை வைத்தே காலத்தை ஓட்ட முடியாது. அணிக்கு என்று தனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை என்று கங்குலி உறுதியாக இருந்தார்.
கண்டறிந்த குழு
அப்போது பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த டால்மியா, திறமையான வீரர்களை கண்டறிய ஒரு திட்டத்தை உருவாக்கினார். அந்த குழு, நாட்டின் அனைத்து பகுதிக்கும் சென்று பார்த்த போது தான் தோனி துலிப் கோப்பையில் கிழக்கு பிராந்தய அணிக்காக விளையாடினார். அவரின் வித்தியாசமான அதிரடி ஆட்டம் அந்த குழுவின் கவனத்தை ஈர்த்தது.பிரகாஷ் போடார் என்ற முன்னாள் வீரர் தான் தோனி குறித்து கிரிக்கெட் அகாடமிக்கு தெரிவித்தது.
இந்தியா ஏ அணி
இதனையடுத்து தோனியை கண்காணிக்க தொடங்கிய பி.சி.சி.ஐ., அவருக்கு ஜிம்பாப்வே ஏ அணியுடன் விளையாட வாய்ப்பு வழங்கியது.இதில் தோனி விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டார். பிறகு பாகிஸ்தான் ஏ,கென்யா ஏ அணியுடன் முத்தரப்பு தொடரில் இந்தியா ஏ விளையாடியது. இதில் தோனி 2 சதங்கள் உள்பட 362 ரன்கள் குவித்தார். தோனியின் திறமையை அறிந்த கங்குலி, அவரை அணியில் தேர்வு செய்ய அழுத்தம் கொடுத்தார்
Recommended Video
முதல் போட்டி
அதன் பின் இதே நாள் 2004 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தோனி களமிறங்கினார். ஆனால் முதல் போட்டியில் பந்தை எதிர்கொள்ளாமலேயே ரன் அவுட் ஆனார். இருப்பினும் தோனிக்கு பாகிஸ்தான் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் நிகழ்ந்த அனைத்தும் வரலாறு தான்.