
சீனியர்களுக்கு ஓய்வு
50 ஓவர் உலகக்கோப்பை தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றை மனதில் வைத்து சீனியர்களின் பணிச்சுமைகள் குறைக்கப்பட்டுள்ளன. ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோருக்கு டி20 கிரிக்கெட்டில் ஓய்வு தரப்படுகின்றன. ஆனால் நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள ஜஸ்பிரித் பும்ராவின் நிலைமை என்னதான் ஆனது என ரசிகர்களுக்கு குழப்பம் எழுந்து வருகிறது.

நீண்ட ஓய்வு
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தின் போது முதுகில் ஏற்பட்ட காயத்தினால் பாதிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா பல்வேறு முக்கிய தொடர்களை தவறவிட்டார். கடந்த இலங்கை தொடரில் கம்பேக் தருகிறார் என அறிவிக்கப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் மீண்டும் முதுகுவலி பிரச்சினை எனக்கூறி வெளியேறினார். அடுத்ததாக ஆஸ்திரேலியவுடனான கடைசி 2 டெஸ்ட்களில் விளையாடுவார் எனக்கூறப்பட்டது.

ரோகித் சர்மா விளக்கம்
இதுகுறித்து விளக்கம் அளித்திருந்த ரோகித் சர்மா, பும்ராவின் நிலைமை குறித்து இதுவரை கிடைத்த தகவலின் படி பார்த்தால் ஆஸ்திரேலியாவுடனான கடைசி 2 டெஸ்ட்களுக்கு வருவார். முதுகுவலி என்பது சற்று பெரிதாகும். மீண்டும் ஒருமுறை பும்ராவின் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. முக்கிய தொடர்கள் வருவதால் அவரை அவசரப்படுத்தவில்லை எனக்கூறினார்.

பிசிசிஐ-ன் தகவல்
இந்நிலையில் இதற்கு முரணான தகவலை பிசிசிஐ தந்துள்ளது. அதில், ஆஸ்திரேலிய தொடருக்குள் பும்ரா 100 சதவீதம் உடற்தகுதியை பெறுவது என்பது மிகவும் கடினமானது ஆகும். எப்படிப்பட்ட முக்கியமான தொடராக இருந்தாலும், அவரை இப்போது அவசரப்படுத்துவதாக இல்லை. தற்போது அவர் உடற்தகுதியுடன் இல்லை என்பதால் ஆஸ்திரேலிய தொடருக்கு வருவது சந்தேகம். குணமடைய மேலும் ஒரு மாத காலம் ஆகலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

இனி ஐபிஎல் தான்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரானது பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி மார்ச் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கிவிடும். எனவே ஜஸ்பிரித் பும்ரா நேரடியாக ஐபிஎல்-க்கு தான் வருவார் எனத்தெரிகிறது. இதனால் அவர் மீது ரசிகர்கள் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications