இருவர் இல்லை
டி20 கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு காரணம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடர் தான். வீரர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காக டி20 தொடர்களில் ஓய்வு தரப்பட்டு வருகிறது. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா,ரவீந்திர ஜடேஜா ஆகியோர் என்ன ஆனார்கள் என்பதே ரசிகர்களுக்கு மறந்துவிடும் அளவிற்கு சென்றுள்ளது.
நீண்ட ஓய்வு
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் காயத்தினால் பாதிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா பல்வேறு முக்கிய தொடர்களை தவறவிட்டார். கடந்த இலங்கை தொடரில் கம்பேக் தருகிறார் என அறிவிக்கப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் மீண்டும் முதுகுவலி பிரச்சினை எனக்கூறி வெளியேறினார். அடுத்ததாக வரவுள்ள ஆஸ்திரேலியாவுடனான முதல் 2 டெஸ்ட்களுக்கான அணியிலும் அவர் சேர்க்கப்படவில்லை.
ரோகித் சர்மா விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து ரோகித் சர்மா பதில் கொடுத்துள்ளார். அதில், பும்ராவின் நிலைமை குறித்து எனக்கு தெளிவாக தெரியவில்லை. இதுவரை கிடைத்த தகவலின் படி பார்த்தால் ஆஸ்திரேலியாவுடனான கடைசி 2 டெஸ்ட்களுக்கு வருவார் எனத் தெரிகிறது. மீண்டும் ஒருமுறை பும்ராவின் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் முதுகுவலி என்பது சற்று பெரிதாகும். அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதால் அவர் அணிக்கு தேவை.
மருத்துவர்களின் கருத்து
பெங்களூருவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்களிடம் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறோம். அவருக்கு தேவையான அவகாசத்தை கொடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர். அதன்படி தான் தற்போது செய்து வருகிறோம் என ரோகித் கூறியுள்ளார். பும்ராவின் இடத்தை தற்போது முகமது சிராஜ் தான் நிரப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.