மும்பை: 6 ஆண்டுகளுக்கு பின் ஐபிஎல் தொடரில் கிடைத்த வாய்ப்பை, மும்பை அணியின் விஷ்ணு வினோத் சிறப்பாக பயன்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அசத்தியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் குஜராத் அணியின் ஹர்திக் பாண்டிய, மும்பை அணி ஸ்டார் பிளேயர்களை வைத்து சாம்பியன் பட்டத்தை வெல்வதாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை அணியின் இளம் வீரர்களின் செயல்பாடு இருந்தது.
ஒருபக்கம் மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இன்னொரு பக்கம் விஷ்ணு வினோத் 20 பந்துகளில் 30 ரன்களை விளாசி தள்ளினார். அதில் இரு சிக்சர்கள், இரு பவுண்டரிகளும் அடங்கும். சூர்யகுமார் யாதவை தனியாளாக போராட விடாமல் இளம் வீரர்களும் அதிரடியாக ரன்களை விளாசியது மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் யார் இந்த விஷ்ணு வினோத் என்று ரசிகர்களிடையே தேடி வருகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு வினோத் ஏற்கனவே பல்வேறு அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு ஏன் 2017ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு களமிறக்கப்பட்டார். டெல்லி அணிக்கு எதிராக அறிமுகம் கண்ட அவர், பெரியளவில் ரன்கள் சேர்க்க முடியாததால் ரசிகர்களின் பார்வை விஷ்ணு வினோத் பக்கம் திரும்பவில்லை. இதையடுத்து சில ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.
மும்பை குறித்து ஹர்திக் ஏளன பேச்சு.. அட்ரஸே தெரியாத வீரரை வைத்து பழிவாங்கிய ரோகித்.. செம பதிலடி
இருப்பினும் உள்ளூர் தொடர்களில் அதிரடியான பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். ஆனால் முக்கியமான சூழல்களில் களமிறங்கி ரன்கள் சேர்க்க தவறியதால், பல்வேறு அணிகளும் விஷ்ணு வினோத்தை களமிறக்குவதில் தயக்கம் காட்டினர். இருப்பினும் டெல்லி கேபிட்டல்ஸ், ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் எந்த போட்டிகளிலும் விஷ்ணு வினோத் களமிறங்கவில்லை.
ஆனால் உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் 29 வயதாகும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விஷ்ணு வினோத்தை கடந்த ஆண்டு ஏலத்தில் மும்பை அணி அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது. இந்த நிலையில் சரியான நேரத்தில் மும்பை அணி நிர்வாகம் விஷ்ணு வினோத்தின் திறமையை கண்டறிந்து வாய்ப்பு கொடுத்துள்ளது.
அந்த வாய்ப்பை விஷ்ணு வினோத் சிறப்பாக பயன்படுத்தி கொண்டுள்ளார். 30 ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும், ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி ஷாட் ஒன்றே அவரின் திறமையை ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிடுள்ளது. இதனால் வரும் போட்டிகளிலும் மும்பை அணிக்காக விஷ்ணு வினோத் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.