சுரங்கம்
இந்தியாவின் அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைத்து வருகிறது. பல ஆண்டுகளாக அந்த சுரங்கம் காரணமாக அதானி குழுமத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவர்கள் ஒரு குழுவாக இந்த போராட்டத்தை செய்து வருகின்றனர்.
ஸ்டாப் அதானி
ஆஸ்திரேலியாவில் ஸ்டாப் அதானி என்ற பெயரில் ஒரு இயக்கமே செயல்பட்டு வருகிறது. அவர்கள் கார்மிகேல் நிலக்கரி சுரங்கம் எனும் அந்த அதானி குழும சுரங்கத்துக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர்.
1000 கோடி
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அந்த சுரங்கம் தொடர்பான பணிகளுக்காக அதானி குழுமத்துக்கு 1000 கோடி ஆஸ்திரேலிய டாலர்கள் கடன் வழங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அதை எதிர்த்து சமீப காலமாக குரல் கொடுத்து வருகிறது ஸ்டாப் அதானி இயக்கம்.
திட்டம்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன கிரிக்கெட் தொடரில் தங்கள் போராட்டத்தை நடத்துவதன் மூலம் இந்த எதிர்ப்பை இந்தியா முழுவதும் அறியச் செய்யலாம் என்பதால் ஸ்டாப் அதானி இயக்கத்தினர் திட்டமிட்டு போட்டி நடந்த மைதானத்தின் வெளியே ஒன்று கூடினர்.
உள்ளே வந்த இருவர்
மைதானத்தின் வெளியேயும் அவர்களை காவல்துறை கட்டுப்படுத்தவில்லை. இந்த நிலையில், திடீரென ஏழாவது ஓவருக்கு முன்னே இரண்டு பேர் அதானி சுரங்கத்துக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மைதானத்துக்கு உள்ளே புகுந்தனர்.
என்ன வாசகம்?
அவர்கள் பதாகைகளில் "ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - அதானிக்கு 1000 கோடி கடன் கொடுக்க வேண்டாம்" என எழுதப்பட்டு இருந்தது. அவர்களை அப்புறப்படுத்த வேண்டிய மைதான பாதுகாவலர்கள் ஆடி அசைந்து வந்தனர். அதுவும் விமர்சனத்துக்கு உள்ளானது.
பரபரப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா வீரர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் வெளி உலகில் இருந்து பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் நிலையில் போராளிகள் பிட்ச் வரை வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாவலர்களும் பிட்ச் வரை வந்தனர்.
விளக்கம்
இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம் அளித்துள்ளது. போராளிகள் மற்றும் பாதுகாவலர்கள் வீரர்களிடம் இருந்து ஐந்து மீட்டர் இடைவெளியில் தான் இருந்தனர் என கூறி உள்ளது. எனினும், இந்த சம்பவம் வீரர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி உள்ளது.