4வது டெஸ்ட் போட்டி
3வது டெஸ்ட் போட்டியில் மோசமாக தோல்வியடைந்த இந்திய அணி 4வது டெஸ்டிலும் மோசமான ஆட்டத்தையே தொடக்கத்தில் வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்களுக்கு சுருண்டது. பிறகு பந்துவீச்சில் பெரும் சிரமப்பட்டு இங்கிலாந்து அணியை 291 ரன்களுக்கு அவுட்டாக்கியது. இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 101 ரன்கள் பின் தங்கியது.
அசத்தல் வெற்றி
ஆனால் 2வது இன்னிங்ஸில் அசத்தல் கம்பேக் கொடுத்த இந்திய அணி, 466 ரன்களை சேர்த்தது. ரோகித் சர்மா சதம் அடித்து மிரட்டினார். அதே போல புஜாரா, ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். 368 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 100 ரன்கள் சேர்த்தது. ஆனால் அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
50 ஆண்டு காத்திருப்பு
இந்த வெற்றி இந்தியாவுக்கு 50 ஆண்டுகால காத்திருப்புக்கு கிடைத்த பரிசாகும். இங்கிலாந்தின் பெருமை மிக்க ஓவல் மைதானத்தில் 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஒரு வெற்றியை கூட பெறவில்லை. 1971-ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணிதான் கடைசியாக ஓவல் மைதானத்தில் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்திருந்தது. எனவே 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் முதல் முறையாக இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
சிறந்த கேப்டன்
இந்நிலையில் கேப்டன் விராட் கோலியும் ஆகச்சிறந்த கேப்டனாக பெயர் பெற்றுள்ளார். SENA என கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அதாவது இங்கிலாந்தில் 3 வெற்றிகளும், ஆஸ்திரேலியாவில் 2 வெற்றிகளும், தென்னாப்பிரிக்காவில் ஒரு வெற்றியும் என மொத்தம் 6 வெற்றிகளை இந்தியாவுக்காக அவர் வென்றுக் கொடுத்துள்ளார்.
மற்ற சாதனைகள்
கோலியின் கேப்டன்சியில் இதற்கு முன்னர் வேறு சில சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது. 1993ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுக்கொடுத்த கேப்டன் விராட் கோலி தான். மேற்கிந்திய தீவுகளில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்று கொடுத்த முதல் இந்திய கேப்டன் விராட் கோலிதான். இதே போல ஆசிய அணிகளில் ஒன்று கூட ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றினார் விராட் கோலி. இதனால் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.