புது சர்ச்சை
அந்தவகையில் இந்தாண்டு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளில் கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் ஆகியோரை தக்கவைக்க நிர்வாகங்கள் முடிவெடுத்தும், அவர்கள் நீடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதற்கு காரணம் புதிதாக வந்துள்ள லக்னோ அணி தான் எனக்கூறப்படுகிறது. அதாவது வீரர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி பறிக்கப் பார்ப்பதாக லக்னோ அணி மீது பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
ஏமாற்றிய வீரர்கள்
பஞ்சாப் கிங்ஸ் அணியானது கேப்டன் கே.எல்.ராகுலை முதன்மை வீரராக தக்கவைத்து ரூ.16 கோடி ஊதியமாக கொடுக்க திட்டமிட்டது. ஆனால் அந்த அணியில் இருக்க விரும்பாத ராகுல், லக்னோ அணியுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு ரூ.20 கோடி ஊதியம் பேசப்பட்டுள்ளது. இதே போல ஐதராபாத் அணி தனது முதன்மை தேர்வாக வில்லியம்சனை ரூ.16 கோடிக்கும், 2வது வீரராக ரஷித் கானை ரூ.12 கோடிக்கும் தக்கவைக்கவிருந்தது. ஆனால் ரஷித் கான் தனக்கு ரூ.16 கோடி தான் ஊதியம் வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். இதற்கு காரணம் லக்னோ அணி ரூ.16 கோடி தருவதாக கூறியது தான்.
பிசிசிஐ-யிடம் புகார்
இதனால் தான் லக்னோ அணி மீது பிசிசிஐ-க்கு புகார் சென்றுள்ளது. வீரர்களின் ஓப்பந்த காலம் (அக்.30) முடிவதற்கு முன்னதாகவே வேறு ஒரு அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பிசிசிஐ விதிமுறைபடி தவறு. எனவே இந்த தவறு நிரூபிக்கப்பட்டால் லக்னோ அணி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். இதே போல கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் ஆகியோருக்கும் பெரிய தண்டனை காத்துள்ளது.
ஒரு ஆண்டு சஸ்பண்ட்
அதாவது ஒரு வீரர் ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே வேறு ஒரு அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் ஓராண்டிற்கு சஸ்பண்ட் செய்யப்படுவார். இதற்கு முன்னர் கடந்த 2010ம் ஆண்டு ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இருந்த போதே, வேறு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அவர் ஒரு ஆண்டு சஸ்பண்ட் செய்யப்பட்டார். அந்த வகையில் கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் ஆகியோரும் சஸ்பண்ட் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.