புதிய திட்டம்
2020 ஐபிஎல் தொடர் எதிர்பாராத அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றது. மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் ஐபிஎல் போட்டிகளை அதிக அளவில் பார்த்தனர். இதை அடுத்து பிசிசிஐ அடுத்த 2021 ஐபிஎல் தொடரை பெரிதாக நடத்த திட்டம் போட்டது.
9வது அணி
அதன்படி தற்போது எட்டு ஐபிஎல் அணிகள் உள்ள நிலையில் அத்துடன் புதிதாக ஒன்பதாவது ஐபிஎல் அணியை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டது. அதற்கான வேலைகள் 2020 ஐபிஎல் தொடரின் முடிவிலேயே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
போட்டி போட்ட பணக்காரர்கள்
புதிய ஐபிஎல் அணி குறித்த தகவலை அறிந்த பெரும் பணக்காரர்கள் அந்த அணியை வாங்க போட்டி போட்டு வருவதாக கூறப்பட்டது. அதில் முக்கியமாக அதானி குழுமம் மற்றும் சஞ்சீவ் கோயங்கா புதிய ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக கூறப்பட்டது.
மோகன் லால்
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலும் புதிய ஐபிஎல் அணியை வாங்க இருப்பதாக ஒரு தகவல் கூறப்பட்டது. அவர் பைஜூஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய அணியை வாங்க இருப்பதாகவும் கூட பேசப்பட்டது.
பத்தாவது அணி
இப்படி புதிய அணிகளை வாங்க போட்டி இருந்த நிலையில், பிசிசிஐ கூடுதலாக இரண்டு அணிகளை சேர்க்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 2021 ஐபிஎல் தொடரில் 10 ஐபிஎல் அணிகளை பங்கேற்க வைக்க திட்டம் முடிவாகி உள்ளது.
பிசிசிஐ கூட்டம்
இது பிசிசிஐ வருடாந்திரக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டியதும் அவசியம். மாநில கிரிக்கெட் அமைப்புக்கள் இதை ஒப்புக் கொண்டால் மட்டுமே இந்த திட்டம் நடைமுறைக்கு வரும். அதிக மாநில அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் சிக்கலாகி விடும்.
மெகா ஏலம்
புதிய அணிகளை அறிமுகம் செய்ய உள்ளதால் மெகா ஏலம் நடத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும், புதிய ஐசிசி உறுப்பினர் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் குறித்தும் அந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும்.
எந்த இரண்டு நகரங்கள்?
இரண்டு ஐபிஎல் அணிகளை எந்த இரண்டு நகரங்களை மையமாக கொண்டு அமையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதில் ஒரு நகரம் மட்டும் முடிவாகி உள்ளது. அஹமதாபாத் நகரத்தை வைத்து ஒரு அணி நிச்சயம் உருவாகும்.
லக்னோ, கான்பூர், புனே?
அஹபதாபாத் அணியை அதானி குழுமம் வாங்க வாய்ப்பு உள்ளது. மற்றொரு நகரமாக லக்னோ, கான்பூர் அல்லது புனே இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்பு இரண்டு சீசன்கள் மட்டுமே ஆடிய புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சஞ்சீவ் கோயங்கா வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.