12வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 12வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த சிஎஸ்கே 189 ரன்களை அந்த அணிக்கு இலக்காக கொடுத்தது.
சிறப்பான பௌலிங்
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தியது. அந்த அணியின் முஸ்தாபிசூர் ரஹ்மான் கெய்க்வாட்டின் விக்கெட்டை வீழ்த்தி சிஎஸ்கே விக்கெட் கணக்கை துவக்கி வைத்தார். இதையடுத்து தொடர்ந்து சிறப்பாக விளையாடி 33 ரன்களை அடித்த சிஎஸ்கே வீரர் பிளசிசை கிறிஸ் மோரீஸ் பெவிலியனுக்கு அனுப்பினார்.
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள்
தொடர்ந்து ஜடேஜாவின் விக்கெட்டையும் கிறிஸ் மோரீஸ் வீழ்த்தினார். ராகுல் திவேட்டியா மொயீன் அலியின் விக்கெட்டை வீழ்த்த அணியின் அறிமுக பௌலரான சேத்தன் சகரியா தனது அபார பௌலிங்கை வெளிப்படுத்தி சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு மற்றும் எம்ஸ் தோனி என அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடந்த போட்டியிலும் சிறப்பு
ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி என அடுத்தடுத்து பீல்டில் நிலைத்து ஆட முயன்ற சிஎஸ்கே வீரர்களின் ஆசையை நிராசை ஆக்கினார் சகரியா. கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் என முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார் சகரியா.
யுவராஜ் ரோல் மாடல்
முன்னதாக கிரிக்கெட்டில் தன்னுடைய ரோல் மாடல் யுவராஜ் சிங்தான் என்று சகரியா குறிப்பிட்டுள்ளார். இதேபோல தான் மைதானத்தில் வீழ்த்த விரும்பும் வீரர் பிரித்வி ஷா என்றும் கூறியுள்ளார். தனக்கு எதிராக எப்போது விளையாடினாலும் தன்னை சிறப்பாக பயன்படுத்தி பிரித்வி ரன்களை குவிப்பதாகவும் அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.