மும்பை அணி மாற்றம்
இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள அதிரடி வீரர் இஷான் கிஷான் 73 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக சென்னை ஆடுகளம் பார்க்கப்படுகிறது. மும்பை அணி இதற்கு முன்னர் ஆடிய 5 போட்டியும் சென்னையில் நடைபெற்றவை. அது பேட்டிங்கிற்கு மிகவும் சவாலான ஒன்றாகும். எனவே இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக கோல்டர் நைலை சேர்த்தால் பந்துவீச்சிலும் பலம் சேர்க்கும் மற்றும் லோயர் ஆர்டரிலும் பேட்டிங்கிற்கு ஆள் இருப்பார் என திட்டமிடப்பட்டது.
ரோகித் மீது விமர்சனங்கள்
ஆனால் இன்றைய போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. எனவே சென்னையில் ஆடியதை யோசித்து பார்க்காமல் டெல்லி போன்ற பேட்டிங் ஆடுகளத்தில் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். சென்னையில் தொடக்க வீரர்களே பெரியளவில் சோபிக்காத நிலையில் இஷான் கிஷானால் எப்படி அதிரடி காட்ட முடியும் என ரசிகர்கள் ரோகித் சர்மாவை விமர்சித்து வருகின்றனர். இன்னும் சிலர் மும்பை அணிக்கு சரியான கேப்டனை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
லாரா அட்வைஸ்
இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் பிரைன் லாரா, சில சமயங்களில் மும்பை அணி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். சென்னை களத்தில் அனைத்து வீரர்களுமே சிரமப்பட்டனர். ஆனால் இன்றைய போட்டி டெல்லியில் நடைபெறுவதால் இஷான் கிஷானுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். நானாக இருந்தால் அதைதான் செய்திருப்பேன். அப்போது தான் அவரின் ஃபார்ம் நமக்கு தெரியும் எனத்தெரிவித்துள்ளார்.
சொதப்பிய கோல்டர் நைல்
இஷான் கிஷானுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட நாதன் கோல்டர் நைல் இன்று பெரிய அளவில் சோபிக்காமல் ஏமாற்றமே தந்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 35 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. இன்றைய போட்டியில் அவர் சேர்க்கப்பட்டு என்ன பலன் என ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.