ஆட்டம்
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் கூட்டணியே அனைவருக்கும் வியப்பாக இருந்தது. ஏனென்றால் ஃபினிஷராக களமிறங்க கூடிய பென் ஸ்டோக்ஸ் ஓப்பனராக- மன்னன் வோஹ்ரா உடன் களம் இறங்கினார்.
ஓப்பனிங்
கடின இலக்கு என்பதால் ஸ்டோக்ஸ் ஓப்பனிங் களமிறங்கி அதிரடி காட்டினால் நன்றாக இருக்கும் என அந்த அணி கணித்தது. ஆனால் அதற்கு மாறாக தொடக்கத்திலேயே இந்த ஜோடி பிரிந்தது. ஸ்டோக்ஸ் டக் அவுட் மற்றும் மன்னன் வோஹ்ரா 5 ரன்களுக்கும் வெளியேறினர். இதன் பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடி சதமடித்து அணியை மீட்டார். எனினும் அந்த சதம் வீணாகி ராஜஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஜாஸ் பட்லர்
அணியில் இருந்த ஜாஸ் பட்லர் ஓப்பனிங் களமிறக்கப்படாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. உலகின் சிறந்த ஓப்பனர்கள் மற்றும் விக்கெட் கீப்பர்களில் ஒருவரான ஜாஸ் பட்லர் நேற்று அணியில் இருந்தும் அவருக்கு ஓப்பனிங் ஆட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கீப்பிங்கிலும் அவர் ஒதுக்கப்பட்டார். விக்கெட் கீப்பிங்கில் அவர் ஈடுபடும் போது ஃபீல்ட் செட்டிங்கிற்கு மிக உதவக்கூடியவர் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிருப்தி
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர் அணியில் இருந்தும் ஏன் ஓப்பனிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. அவர் உலகின் சிறந்த வீரர். இங்கிலாந்து அணி போன்ற சர்வதேச அணிக்கே சிறப்பாக செயல்படும் போது உள்நாட்டு கிரிக்கெட்டிற்கு சிறப்பாக பங்காற்றிட முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
வலுக்கும் எதிர்ப்பு
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷ் பாக்ளே, எனக்கு ராஜஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் புரியவில்லை. பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஃபினிஷர், ஜாஸ் பட்லர் சிறந்த ஓப்பனர். ஆனால் இங்கு அப்படியே மாறியுள்ளது என தெரிவித்துள்ளார். பட்லர் குறித்த பிரச்னை பெரிதாக வெடிப்பதால் அடுத்த போட்டியில் பட்லர் ஓப்பனிங் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.